பசுபதி பாண்டியன் கொலை வழக்கு: வள்ளியூர் நீதிமன்றத்தில் 2 பேர் சரண்
வள்ளியூர்: தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்புத் தலைவர் பசுபதி பாண்டியன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த லட்டு என்ற நடராஜன் மற்றும் பாஷா என்ற மாடசாமி ஆகியோர் வள்ளியூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
கடந்த மாதம் 10ம் தேதியன்று திண்டுக்கல் நந்தவனப்பட்டியில் உள்ள தனது வீட்டுக்கு வெளியே அமர்ந்திருந்தபோது பசுபதி பாண்டியனை ஒரு கும்பல் சைக்கிளில் வந்து கொடூரமாகக் கொலை செய்தது.
இந்த வழக்கில் ஆறுமுகசாமி, அருளானந்தன் ஆகியோர் வள்ளியூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். தாடிகொம்பு போலீசார் இருவரையும் காவலில் எடுத்து விசாரித்ததில் முன்விரோதம் காரணமாக தூத்துக்குடி மூலக்கரையைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உத்தரவின் பேரில் பசுபதி பாண்டியனை கொலை செய்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சுபாஷ் பண்ணையார் உள்பட 14 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
கொலையாளிகளுக்கு வீடு எடுத்துக் கொடுத்து தங்க வைத்து உதவி செய்த திண்டுக்கல்லைச் சேர்ந்த நிர்மலா மற்றும் ஜான்பாண்டியன் கட்சியான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திண்டுக்கல் மாவட்டத் தலைவரும், கரட்டழகன்பட்டி வெள்ளோடு பகுதி ஊராட்சி ஒன்றிய உறுப்பினருமான முத்துப்பாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
சுபாஷ் பண்ணையார் மற்றும் அவரது கூட்டாளிகள் மும்பை, கேரளாவில் பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகின்றது. அவர்களைப் பிடிக்க சுமார் 30 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த லட்டு என்ற நடராஜன் மற்றும் பாஷா என்ற மாடசாமி ஆகியோர் வள்ளியூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications