மு.க. அழகிரியின் பிறந்தநாள் விழாவை புறக்கணித்த பொட்டு சுரேஷ்
மதுரை: திமுக தென் மண்டல அமைப்புச் செயலாளரும், மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியின் பிறந்தநாள் விழாவை அவரது வலது கரம் என வர்ணிக்கப்பட்ட பொட்டு சுரேஷ் புறக்கணித்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலாளரும், மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி தனது 61வது பிறந்த நாளை கடந்த 31ம் தேதி கொண்டாடினார். விழாவில் 16,661 ஏழைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மு.க. அழகிரிக்கு பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் அழகிரிக்கு நெருக்கமானவரும், அவரது வலது கரம் என்று கூறப்பட்டவருமான பொட்டு சுரேஷ் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது.
தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பின்பு மதுரையில் பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி, எஸ்ஸார் கோபி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போது அவர்கள் அனைவரையும் அழகிரி சிறையில் வைத்து சந்தித்து ஆறுதல் கூறினார்.
பொட்டு சுரேஷ் வராவிட்டாலும் அட்டாக் பாண்டி, எஸ்ஸார் கோபி ஆகியோர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.