எகிப்தில் கால்பந்தாட்ட போட்டியில் பெரும் கலவரம்: 74 பேர் பலி, பலர் படு காயம்
கெய்ரோ: எகிப்தில் நடந்த கால்பந்தாட்ட போட்டியில் வெடித்த வன்முறைக்கு 74 பேர் பலியாகினர், பலர் காயமடைந்தனர்.
எகிப்தில் உள்ள போர்ட் சிட் நகரில் உள்ளூர் கால்பந்தாட்ட அணிகளான அல் மஸ்ரி மற்றும் அல் அஹ்லி மோதிய போட்டி நடந்தது. அதில் அல் மஸ்ரி அணி அல் அஹ்லி அணியை 3-0 என்ற கணக்கில் வென்றது. போட்டி முடிந்ததும் நடுவர் விசிலைத் தான் ஊதினார் உடனே அல் மஸ்ரி அணியின் ஆதரவாளர்கள் மைதானத்திற்கு ஓடி வந்தனர்.
அவர்கள் எதிரணியின் ஆதரவாளர்களை நோக்கி கற்கள், பாட்டில்கள் மற்றும் பட்டாசுகளைத் தூக்கி வீசினர். இதனால் ஆத்திரமடைந்த அல் அஹ்லி ஆதரவாளர்கள் பதிலுக்கு கற்களை வீசினர். இதனால் மைதானத்தில் பெரும் கலவரம் வெடித்தது. இதில் 74 பேர் பலியாகினர், பலர் காயமடைந்தனர். காயடமைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த எகிப்தை ஆளும் ராணுவ தலைவர் பீல்டு மார்ஷல் ஹுசைன் தந்தவி 2 ராணுவ விமானங்களை சம்பவ இடத்திற்கு அனுப்பி கால்பந்தாட்ட வீரர்களையும், காயமைடந்தவர்களையும் அங்கிருந்து அழைத்து வரச் செய்தார்.
இறந்தவர்களில் பலர் கத்தி குத்தால் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. அல் மஸ்ரி அணியை இழிவுபடுத்தும் வகையிலான போஸ்டர்களை எதிரணியினர் வைத்திருந்ததால் தான் இந்த கலவரம் வெடித்ததாக அந்நாட்டின் நைல் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.