நன்கு திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல்-டெல்லி குண்டுவெடிப்பு பற்றி ப.சிதம்பரம்
டெல்லியில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் ப. சிதம்பரம் கூறியதாவது:
இஸ்ரேலிய தூதரக அதிகாரியின் வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு திட்டமிட்ட பயங்கரவாதத் தாக்குதல்தான்.
மர்ம நபர் ஒருவர் வாகனத்தின் கதவில் வெடிகுண்டை பொருத்தி வெடிக்கச் செய்துள்ளார். வெடிகுண்டை பொருத்திய 4 அல்லது 5 வினாடிகளிலேயே குண்டை வெடிக்கச் செய்துள்ளனர். குண்டுவெடிப்பு சப்தம் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குக் கேட்டுள்ளது.
சிசிடிவியில் சரியாக தெரியவில்லை
தாக்குதலை நடத்தியோரை கண்டுபிடிக்க சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளைப் பார்த்தோம். அதில் வெடிகுண்டை பொருத்திய இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபரின் தெளிவான உருவமோ அந்த வாகனத்தின் நம்பர்பிளேட்டோ சரியாக பதிவாகவில்லை. நன்கு பயிற்றுவிக்கப்பட்ட நபரைக் கொண்டே தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
தாக்குதலில் ஈடுபட்டோரை அடையாளம் காண சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். இஸ்ரேல் தூதரின் வாகனம் மீதான தாக்குதலுக்கு எந்த ஒரு இயக்கத்தையும் நாங்கள் குறிப்பிட்டு அடையாளம் காட்டவில்லை. இத்தகைய தாக்குதல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இந்தியாவில் வேண்டாம்
இஸ்ரேலைப் போலவே மற்ற நாடுகளுடனும் இந்தியா நல்லுறவையே பேணி வருகிறது. இந்திய மண்ணில் எந்த நாட்டுத் தூதர் மீதும் தாக்குதல் நடத்துவதை ஏற்கவே முடியாது. தாக்குதலை நிகழ்த்தியது யார் என்பதை கண்டுபிடிப்போம் என்று இஸ்ரேலுக்கு உறுதியளித்துள்ளோம்.
இந்த சம்பவம் தொடர்பாக வெளியுறவுத் துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோர் இஸ்ரேல் தூதர் அலோன் உஸ்பிஸுடன் பேசியுள்ளனர் என்றார் ப.சிதம்பரம்.