காதலர் தின வாழ்த்து அட்டைகளுக்கு தீ வைத்த இந்து முன்னணியினர்: தூத்துக்குடியில் பரபரப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் காதலர் தின வாழ்த்து அட்டைகளை இந்து முன்னணியினர் தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
காதலர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. வெளிநாட்டு கலச்சாரம் என்றாலும் நம் நாட்டிலும் காதலர் தினத்தை ஏரளாமானோர் உற்சாகமாக இன்று கொண்டாடினார்கள். பூங்காக்கள், பொது இடங்களிலும், சினிமா தியேட்டர்களிலும் காதல் ஜோடிகள் கூட்டமாகவே காணப்பட்டது.
கொண்டாடங்கள் ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் காதலர் தின கொண்டாடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் நடந்தன. தமிழகத்தில் சில இடங்களில் பொது இடங்களில் இருந்த காதலர்களை சில அமைப்பினர் விரட்டியடித்தனர். தூத்துக்குடியில் காதலர் தின வாழ்த்து அட்டைகளை இந்து முன்னணியினர் தீ வைத்து எரித்தார்கள். தூத்துக்குடி சிவன் கோவில் முன்பு இந்து முன்னணியைச் சேர்ந்த சிலர் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் சுந்தர் தலைமையில் இன்று காலை திடீரென திரண்டு வந்தனர்.
அவர்கள் கோவிலின் முன்பு உள்ள கடைகளில் தொங்கவிடப்பட்டிருந்த காதலர் தின வாழ்த்து அட்டைகளை எடுத்து நடுரோட்டில் போட்டு தீ வைத்து எரித்தனர். அப்போது அவர்கள் காதலர் தின கொண்டாடங்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். பின்பு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.