சென்னை, தமிழகத்தின் பெரும்பகுதியை மூடிய கடும் பனிமூட்டம்-மக்கள் அச்சம்!
தமிழகத்தில் தற்போது பனியின் தாக்கம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது. இரவிலும், அதிகாலையிலும் மட்டுமே பனி சற்று அதிகமாக உள்ளது. பகல் நேரங்களில் வெயில் வெளுத்து வாங்க ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. எதிரில் நிற்பவர் தெரியாத அளவுக்கு மிக அடர்த்தியாக பனிமூட்டம் இருந்தது. இந்தப் பனி மூட்டம் சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் ஒரே சமயத்தில் காணப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையத் தகவல்கள் கூறுகையில், தரைக்காற்றின் வேகம் குறைந்து ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் இந்த பனி மூட்டம் ஏற்பட்டுள்ளதாக விளக்கினர்.
சென்னையில் காலையில் காணப்பட்ட இந்த கடும் பனிமூட்டத்தால் மக்கள் பெரும் குழப்பமடைந்தனர். சாலைகளில் வாகனங்களில் சென்றோர் பெரும் தடுமாற்றத்துக்குள்ளானார்கள். அத்தனை பேரும் முகப்பு விளக்கை போட்டபடி பயணித்தனர். காலை 9 மணி வரையிலும் பனி மூட்டம் விலகவில்லை.
மேலும் வேகமாகவும் வாகனங்களால் செல்ல முடியவில்லை. ரயில் சேவையிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ரயிலக்ள் அனைத்தும் வழக்கமான வேகத்தை விட குறைந்த வேகத்திலேயே சென்றன.
விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. விமானங்கள் எதுவும் இயக்கப்படவில்லை. பனி விலகிய பின்னரே விமானங்களை இயக்குவோம் என்று அதிகாரிகள் கூறியதால் பயணிகள் விமான நிலையத்தில் காத்துக் கிடந்தனர்.
சென்னை மட்டுமல்லாமல், அருகாமை மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், கரூர், திருச்சி என பல மாவட்டங்களிலும் இன்று பனி மூட்டம் மக்களை வியப்படைய வைத்தது.