சென்னை நிருபர்கள் மோசம், சின்னச் சின்னப் பசங்களா இருக்காங்க-ராமதாஸ்!
திருச்சி: திருச்சியில் நடந்த புதிய அரசியல் புதிய நம்பிக்கை என்ற புத்தக வெளியீட்டின் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை நிருபர்கள் மிகவும் மோசம், சின்னச் சின்னப் பசங்களாக இருக்காங்க என்று அலுத்துக் கொண்டார். திருச்சி நிருபர்களை வாயார பாராட்டினார்.
பாமக சார்பில் புதிய அரசியல் புதிய நம்பிக்கை என்ற புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை ஊர் ஊராக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டு அறிமுகம் செய்து வைத்து வருகிறார்.
திருச்சி சங்கம் ஹோட்டலில் இதுதொடர்பான நிகழ்ச்சி நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசினார் ராமதாஸ். அவர் பேசுகையில்,
அப்போது பேசிய அவர், இதற்கு முன்பு இந்த புத்தகத்தை கோவை, சென்னை, மதுரை ஆகிய இடங்களில் வெளியிட்டுள்ளேன்.
சென்னை நிருபர்கள் மிகவும் மோசம். சின்ன சின்ன பசங்க நிருபர் என்று வந்து விடுகிறார்கள். தினந்தோறும் செய்தித்தாள்களை படிக்காமல் கேள்வி கேட்கிறார்கள். அரசியலைப் பற்றி முழுமையாக தெரியாமல், நிருபராக இருக்கிறார்கள்.
ஆனால் திருச்சியில் அப்படி இல்லை. ரொம்ப சீனியர்ஸ் இருக்கிறீர்கள். முழு அரசியல் தெரிந்தவர்களாக இருக்கிறீர்கள். முழு பத்திரிகையாளர்களாகவே கேள்வி கேட்கிறீர்கள் என்றார்.
வாத்தியராக மாறினார் அய்யா!
அதன் பிறகு திடீரென வாத்தியாராக மாறி விட்டார் டாக்டர் ராமதாஸ். நிருபர்களைப் பார்த்து, அனைவரும் முதல் பக்கத்தை திருப்புங்கள் என்றார். திருப்பிட்டீஙகளா என்று கேட்டு விட்டு, அதில் இரண்டு பகுதிகளாக இந்தப் புக்கத்தை பிரித்திருக்கிறோம். முதல் பகுதியில் முன்னுரையில் இதுவரை ஆண்ட திராவிட கட்சிகள் தமிழகத்துக்கு செய்த துரோகங்கள், தேசிய கட்சிகளால் தமிழகத்துக்கு நேர்ந்த கேடுகள், தமிழகத்தை தலைகுனிய வைத்த திராவிட கட்சிகளின் ஊழல்கள் ஆகியவற்றை புள்ளி விபரத்தோடு விவரித்திருக்கிறோம்.
இரண்டாவது பாகத்தில் பாமகவின் கொள்கை, இனி அரசியலில் புதிய நம்பிக்கை, புதிய அரசியல் செயல்திட்டம் என்று 16 பாகங்களாக பிரித்து தனித்தனியாக கொடுத்திருக்கிறேன். இது அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் என்றார்.
பிறகு நிருபர்களைப் பார்த்து இப்போது கடைசிப் பக்கத்துக்கு வாங்க என்ற ராமதாஸ், இந்த புத்தகத்தை பத்திரிக்கையாளர்களுக்காகவே கொடுக்கிறோம். நீங்கள் சார்ந்த பத்திரிக்கை நிறுவனங்களும், ஊடக நிறுவனங்களும் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளை கொண்டிருக்கலாம். ஆனால் உங்களுக்கு அரசியலைப் பற்றிய ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கும். அதனை இந்த புத்தகத்தில் கடைசிப் பக்கத்தில் கருத்து கேட்பு படிவம் என்ற பகுதி இருக்கிறது. உங்களின் கருத்துக்களை அதில் முழுமையாக எழுதி அனுப்பவும். தொலைபேசியிலோ அல்லது நேரிடையாகவோ என்னிடம் சொல்லலாம். ரகசியம் பாதுகாக்கப்படும் என்றார்.
இப்படியாக செய்தியாளர்கள் சந்திப்பு படு சுவாரசியமாக சென்றது.