மின்தட்டுப்பாட்டை சமாளிக்க 1,900 இடங்களில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்கள்: ஜெயலலிதா உத்தரவு

தமிழக மக்களின் பெரும் பிரச்சனையாக இருப்பது தினமும் 8 முதல் 12 மணிநேரம் வரை நிலவும் மின்வெட்டு தான். எனவே, மின் தட்டுப்பாட்டு பிரச்சனையை சமாளிக்க சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கவும், நடப்பு நிதியாண்டில் மாநிலம் முழுவதும் 20,000 சூரிய மின்சக்தி விளக்குகள் அமைக்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி முதற்கட்டமாக அனைத்து அரசு அலுவலக வளாகங்கள், ஓய்வு இல்லங்கள் உள்ளிட்ட பகுதிகளில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை செய்து வருகிறது.
முதல்வரின் உத்தரவையடுத்து மாநிலம் முழுவதும் 1,900 இடங்களில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஊராட்சி நிர்வாகத்திற்கும் சொந்தமான இடத்தில் 500 வாட் திறன் கொண்ட மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த நிலையங்களில் தனியார் மூலம் ஆர்.எம்.யூ. எனப்படும் சிறிய வகை நவீன டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட மின் கட்டமைப்பு அமைத்து இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை வைத்து சூரிய சக்தி தெருவிளக்குகள் இயக்கப்படும்.
இது குறித்து தமிழ்நாடு எரிசக்தித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது,
தமிழகத்தில் 20,000 இடங்களில் சூரிய சக்தி தெரு விளக்குகள் அமைக்கப்படும். ஒவ்வொரு நிலையத்தில் கிடைக்கும் மின்சாரம் மூலம் 10 விளக்குகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்படும். அதன்படி 1,900 நிலையங்கள் மூலம் 19,000 சூரிய சக்தி தெரு விளக்குகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்படும். ஒவ்வொரு தெரு விளக்கிலும் 20 வாட் திறன் கொண்ட பல்பு பொருத்தப்படும்.
இது தவிர சூரிய மின் சக்தி உற்பத்தி செய்யும் தகடுகள் பதித்த தெரு விளக்கு கம்பங்கள் 1,000 இடங்களில் அமைக்கப்படும். சூரிய சக்தி கிடைக்காத வேளையில் தெரு விளக்குகள் எரியாமல் இருப்பதை தடுக்க சூரிய சக்தி தெரு விளக்குகள் அனைத்திற்கும் மின் இணைப்பும் வழங்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications