பெகுரா, சந்தோலியா ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு-காத்திருக்கிறார் ராசா!
இதில் சந்தோலியாவுக்கு சிபிஐ நீதிமன்றம் ஜாமீன் வழங்கிவிட்டது. ஆனால், இதற்கு டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துவிட்டது.
சித்தார்த் பெகுரா கனிமொழியுடன் சேர்ந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. பெகுரா அரசு அலுவலர், எனவே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களோடு, பெகுராவை ஒப்பிடமுடியாது என்று நீதிமன்றம் கூறியது.
இதையடுத்து பெகுரா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதே போல தனது ஜாமீனுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததை எதிர்த்து சந்தோலியாவும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த இரு மனுக்களும் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது சந்தோலியா மற்றும் பெகுராவின் மனுக்களுக்கு பதில் மனு தாக்கல் செய்ய சிபிஐக்கு கால அவகாசம் வழங்கிய உச்ச நீதிமன்றம், விசாரணையை வரும் மார்ச் 13ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
இந்த வழக்கில் திமுக எம்பி கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார், ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா, சினியுக் நிறுவன அதிபர் கரீம் மொரானி உள்பட 11 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். ராசா இன்னும் ஜாமீன் மனுவே தாக்கல் செய்யவில்லை.
பெகுராவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்புக்காக அவர் காத்துக் கொண்டுள்ளார். இன்று பெகுராவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கினால், உடனடியாக ராசாவும் ஜாமீன் கோரி டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வார் என்று தெரிகிறது.
சிபிஐ நீதிமன்றத்தில் டிராய் முன்னாள் தலைவர் சாட்சியம்:
இந் நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) முன்னாள் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா நேற்று சிபிஐ நீதிமன்றத்தில் சாட்சி அளித்தார்.
அவர் கூறுகையில், ஏற்கெனவே வகுக்கப்பட்ட கொள்கைகளின் அடிப்படையிலேயே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை மத்திய அரசு மேற்கொண்டது என்று 2008ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அப்போதைய தொலைத் தொடர்புத்துறை செயலாளர் சித்தார்த் பெகுரா எனக்குக் கடிதம் எழுதினார்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் டிராய் அமைப்பின் பரிந்துரைகளிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டால், அதுபற்றி எங்களுடன் ஆலோசிக்க வேண்டும் என்று தொலைத் தொடர்புத் துறைக்கு டிராய் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது என்றார் மிஸ்ரா.