போதையில் விபத்துக்கள்: கடும் நடவடிக்கை தேவை-உயர்நீதிமன்றம்
சென்னை: குடிபோதையில் சாலை விபத்தை ஏற்படுத்தி மற்றவர்களை பலியாக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த எம்.ரமேஷ், கடந்த மாதம் (ஜனவரி) 26ம் தேதி மெரினா கடற்கரை சாலையில் கார் ஓட்டி சென்றார். அப்போது அவரது கார் சாலை தடுப்பு கோட்டை தாண்டி சென்று, எதிரே வந்த சில வாகனங்களின் மீது மோதியது. இதில் ஒருவர் பலியானார், சிலர் காயமடைந்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த அண்ணா சதுக்கம் போலீசார், கடந்த மாதம் (ஜனவரி) 30ம் தேதி ரமேஷை கைது செய்தனர். முதலில் ரமேஷ் மீது தொடரப்பட்ட வழக்கை 304(ஏ) என்ற சட்டப் பிரிவில் இருந்து 304(2) என்ற பிரிவுக்கு போலீசார் மாற்றினர். 304(2) சட்டப்படி, ஒருவரை கொலை செய்யும் நோக்கம் இல்லை என்றாலும், அவருக்கு மரணத்தை ஏற்படுத்துவது போல் செயல்படுவது குற்றமாகும்.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரமேஷ் மனு தாக்கல் செய்தார். இதில் தனக்கு ஜாமீன் வழங்குமாறும் தெரிவித்து இருந்தார். இம்மனு நேற்று நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணைக்கு பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது,
நாட்டில் குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுபவர்களில் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் அதிகம். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சாலை விபத்தில் சிக்கி பலியாவதாக தேசிய குற்ற பதிவு புள்ளி விவரங்கள் (என்.சி.ஆர்.பி.) தெரிவிக்கின்றன.
குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவது தான் இதற்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டுநருக்கும், விபத்தில் சிக்கியவருக்கும் முன் தொடர்பு எதுவும் இல்லை. ஆனால் விபத்தில் சிக்கியவரின் இறப்பிற்கு, ஓட்டுநர் காரணமாகிவிடுகின்றார். இந்த நிலையை தடுத்து நிறுத்த மாநில அரசும், நீதிமன்றங்களும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்.
சாலை விபத்து வழக்குகளில் குற்றவியல் நீதிமன்றங்கள் இயந்திரத்தனமான உத்தரவுகளை பிறப்பிக்கின்றன. இதனால் குற்றத்தை ஒப்புக் கொண்டவர்களும் சுலபமாக விடுபடும் வகையில், அபராதத்தை மட்டும் விதிப்பதோடு முடித்து கொள்கின்றனர். இது சட்டத்துக்கு முரணான நடைமுறையாகும்.
குடித்துவிட்டு விபத்துகளை ஏற்படுத்துவோர் மீதான வழங்குகளை, உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட பல்வேறு தீர்ப்புகளின் அடிப்படையில் நடத்துவது அவசியம். இவ்வழக்கில் விபத்து ஏற்பட்ட காலகட்டத்தில் மனுதாரர் மது போதையில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே அவர் மீது 304(2) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ததில் தவறில்லை. ரமேஷ் மீதான வழக்கில் விசாரணை முடிவு பெற்றுவிட்டதால் அவரை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்கின்றேன்.
குடிபோதையில் வாகனத்தை ஒட்டிச் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் யாராவது இறந்ததாக கருதப்படும் வழக்கை, ஐ.பி.சி. 304(2) என்ற கடுமையான சட்டப் பிரிவின் கீழ் போலீசார் பதிவு செய்ய வேண்டும். (இந்தப் பிரிவின்படி அதிக ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்படும்).
எனவே இயந்திரத்தனமாக வெறும் அபராதத்தை மட்டும் விதிப்பதை விட்டுவிட்டு, இது போன்ற ஒவ்வொரு வழக்கையும் தனித்தனியாக ஆராய்ந்து தகுந்த தண்டனையை குற்றவாளிகளுக்கு விதிக்க வேண்டும் என்று அந்த தீர்ப்பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.