யாரை வேண்டுமானாலும் கைது செய்யும் அதிகாரம் கேட்கிறது என்.எஸ்.ஜி!
டெல்லி: மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு மாநிலங்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தேசிய பாதுகாப்புப் படையினர் யாரை வேண்டுமானாலும் கைது செய்ய அனுமதிக்க வேண்டும் என்று புதிய கோரிக்கையை தேசிய பாதுகாப்புப் படை முன்வைத்துள்ளது.
பயங்கரவாத ஒழிப்பு உள்ளிட்ட பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளில், தேசிய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்களின் நடவடிக்கைகளின்போது, யாரை வேண்டுமானாலும் கைது செய்யும் சிறப்பு அதிகாரத்தை (சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ்) அளிக்க வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சகத்திடம், இவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின்போது, யாரை வேண்டுமானாலும் கைது செய்யும் சிறப்பு அதிகாரம் "தடா' சட்டத்தின் கீழ், இவர்களுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, தடா சட்டம் கைவிடப்பட்ட நிலையில், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், இந்த சிறப்பு அதிகாரம், சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டும் என்பது, தேசிய பாதுகாப்பு படையினரின் கோரிக்கை. ஆனாலும், இந்த கோரிக்கை குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.