எம்.பி.க்கள் கொள்ளையர்கள்- கொலைகாரர்கள்: கொந்தளிக்க வைத்த கெஜ்ரிவால் பேச்சு!
டெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர்களை கொள்ளையர்கள் என்றும் கொலைகாரர்கள் என்றும் விமர்சித்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் ஹசாரே குழுவின் முக்கிய உறுப்பினரான அரவிந்த் கெஜ்ரிவால்.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. ஹசாரேவின் ஊழல் எதிர்ப்புக் குழுவினரும் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றனர்.
ஹசாரே குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவால் தில்லியையடுத்த காஜியாபாதில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதுதான் இப்போது சர்ச்சைகளை சிறகடிக்க வைத்திருக்கிறது.
கெஜ்ரிவால் பேசியது என்ன?
காசியாபாத்தில் கெஜ்ரிவால் பேசியதாவது:
இப்போதைய நாடாளுமன்றத்தில் 163 உறுப்பினர்கள் மீது பல தரப்பட்ட குற்றங்களுக்கான வழக்குகள் பதிவாகியுள்ளன. பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்தது முதல், கொள்ளை, கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் வரை இந்த நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். நிலைமை இவ்வாறு இருக்கும்போது ஊழலை ஒழிக்கும் வலுவான லோக்பால் சட்டத்தை இவர்கள் நிறைவேற்றுவார்கள் என்று எப்படி நம்புவது? வறுமையிலிருந்தும் ஊழலிலிருந்தும் நமக்கு எவ்வாறு விடிவு கிடைக்கும் என்பதுதான் கெஜ்ரிவாலின் பேச்சு.
சும்மா விடுவார்களா நாடாளுமன்ற உறுப்பினர்கள்? வரிந்து கட்டிக் கொண்டு கெஜ்ரிவாலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ்
"நாடாளுமன்றத்தையும் நாட்டு மக்களையும் அவமதிக்கும் பேச்சு இது. ஜனநாயகத்தை பலவீனப்படுத்தக் கூடிய கருத்து இது' என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரஷீத் அல்வி கூறினார்.
பாஜக
தங்களை நல்லவர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக மற்றவர்கள் அனைவரும் கயவர்கள் என்பது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் பேச்சு இது. இவர்களுக்கு இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை இருப்பதாகத் தெரியவில்லை என்று பாஜக மூத்த தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
ஆர்ஜேடி
கெஜ்ரிவாலின் பேச்சுக்காக, அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது அவர் மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டு வருவோம் என்று ராஷ்டிரீய ஜனதா தள கட்சியின் பொதுச் செயலாளர் ராம் கிருபால் யாதவ் கூறியுள்ளார்.
கெஜ்ரிவால் பல்டி:
இந் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் என்று விமர்சிக்கவில்லை என கெஜ்ரிவால் விளக்கம் அளித்துள்ளார்.
அவரது விளக்கம்: நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மீது குற்றவழக்குகள் பதிவாகி இருக்கிறது. 14 பேர் மீது கொலை வழக்கும் 20 பேர் மீது கொலை முயற்சி வழக்குகளும் பதிவாகி உள்ளன. இவர்களெல்லாம் எம்.பி.க்களாக இருப்பதற்கு தற்போதைய அமைப்பு முறைதான் காரணம்.
சிறைக்குப் போன கனிமொழி, கல்மாடி, ராஜா, முலாயம்., லாலு போன்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர். வலுவான லோக்பால் மசோதா கொண்டுவரப்பட்டால் இத்தகைய நிலைமைகளை மாற்றலாம் என்றுதான் குறிப்பிட்டிருந்தேன்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் என்று சொல்லவில்லை. எம்.பிக்களில் நல்லவர்களும் உண்டு. ஆனால் அவர்களால் ஏதும் செய்ய முடியாது. ஏனெனில் ஊழல் கறைபடிந்த குற்றவாளிகளின் பிடியில் நாடாளுமன்றம் சிக்கியுள்ளது என்றார் அவர்.