2ஜி வழக்கு சாட்சிகளை வருமான வரித்துறையினர் மூலம் மிரட்டும் திமுக அமைச்சர்: சு.சாமி
நிருபர்களிடம் அவர் கூறுகையில், கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு வெளிநாட்டு சக்திகள் நிதி உதவி அளிப்பதாக நான் ஏற்கனவே கூறி இருந்தேன். பிரதமர் மன்மோகன் சிங்கும் அதே கருத்தை தற்போது கூறியுள்ளார்.
எனவே உதயகுமார் உள்பட கிளர்ச்சியாளர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
இந்த அணு மின் நிலையம் செயல்படாததால் தமிழ்நாட்டில் மின் வெட்டு அதிகமாகி விட்டது என்று போராட்டக் குழுவினர் மீது ரூ.2,100 கோடிக்கு மத்திய அரசு நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர வேண்டும்.
பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்தியா 8 போர் விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சாட்சியின் உறவினர்களை வருமான வரித்துறையினர் மிரட்டுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் பின்னணியில் திமுக மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் இருப்பதால் அவரை வேறு இலாகாவுக்கு மாற்றும்படி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளோம்.
என்கெளண்டர் மூலம் வங்கி கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை வரவேற்கிறேன். இதை என்கெளண்டர் என்று சொல்லக் கூடாது, உயிரை காக்க போலீசார் நடத்திய தற்காப்பு தாக்குதல் என்றுதான் சொல்ல வேண்டும் என்றார்.