இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வரும் 23ம் தேதி வேலை நிறுத்தம்- பழ.நெடுமாறன் அறிவிப்பு
சென்னை: ஐ.நா.சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வலியுறுத்தி தமிழகத்தில் வரும் 23ம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் 5 லட்சம் தமிழர்கள் வாழ்க்கையை இழந்து நிற்கின்றனர். 1.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இறுதிக்கட்ட போரில் 40,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா.சபையின் முதற்கட்ட அறிக்கை ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது.
மனித குலத்திற்கு எதிராக நடந்துள்ள இக்கொடுமையை எதிர்த்து தமிழக மக்கள் அனைவரும், அரசியல் வேறுபாடுகளை கடந்து ஒன்று சேர்வது அவசியமாகிவிட்டது. தமிழ் மக்களின் கொலைக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் கடமையோடு செயல்பட வேண்டும்.
ஐ.நா சபையின் மனித உரிமை குழுவில் இன அழிப்பு போர் குற்றத்திற்காக, ராஜபக்சே அரசாங்கத்தின் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். இது சர்வதேச விசாரணை குழுவின் நேரடி விசாரணையாக அமைய வேண்டும் என்ற திருத்தத்துடன் இந்தியா இத்தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்.
ராஜபக்சே ஆட்சிக்கு எதிராக தீர்மானத்தை மனித உரிமை குழுவில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளும் ஆதரிக்க வேண்டும். இத்தீர்மானங்களை முன்வைத்து ஜெனீவாவில் தீர்மானம் முன்மொழியப்பட உள்ள வரும் 23ம் தேதி அன்று காலை முதல் மாலை 6 மணி வரை தமிழக மக்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். வணிக நிறுவனங்கள் திறக்காமல் தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.