யாழ்ப்பாணத்தில் பெரும்நிலப்பரப்பு இலங்கைப்படையினர் வசமே உள்ளது: தமிழ் எம்.பி.யிடம் மக்கள் புகார்
யாழ்ப்பாணம்: வலிகாமம் வடக்கு - வசாவிளான் பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள் அங்கு மீள்குடியேற்றப்பட்டு விட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், அப்பகுதியில் சுமார் 90 விழுக்காடு நிலப்பகுதியை இலங்கைப் படையினரே தங்கள் வசம் வைத்துள்ளதாக அப்பகுதியில் வாழும் தமிழ் மக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனிடம் கூறியுள்ளனர்.
வசாவிளான் பகுதி மக்களை சந்திப்பதற்காகச் சென்ற சிறிதரனிடம், இலங்கைப் படையினர் தங்கள் வசம் வைத்துள்ள நிலப்பகுதிகள் குறித்து விவரம் வெளியே தெரியாமல் மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
போர் நடக்கும் போது புலம்பெயர்ந்த மக்களை மீண்டும் மீள்குடியேற்றம் செய்து வருவதாகவும், பல பகுதிகளில் இப்பணிகள் முடிந்துவிட்டதாகவும் ராஜபக்சே கூறி வரும் நிலையில், அங்குள்ள உண்மை நிலை வேறுமாதிரியாக உள்ளதை சிறிதரன் எடுத்துக் கூறியுள்ளார்.