மூவர் தூக்கு வழக்கின் விசாரணை: ஜூன் 22-ந் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையை ரத்து செய்ய கோரும் வழக்கு மீதான விசாரணை ஜூன் 22-ந் தேதிக்கு வைக்கப்பட்டுள்ளது.
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை குடியரசு தலைவர் 11 ஆண்டுகளுக்குப் பிறகு தள்ளுபடி செய்தார். எனவே இதை எதிர்த்து 3 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாகப்பன், சத்திய நாராயணன் ஆகியோர் 3 பேரையும் தூக்கிலிட கடந்த ஆகஸ்ட் மாதம் இடைக்கால தடை விதித்தனர். இந்த வழக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றத்தில் முல்லர், பாஸ் ஆகியோர் தாக்கல் செய்த கருணை மனு மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க கோரப்பட்டது. இதையடுத்து இன்று விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இன்று காலை மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்றத்தில் கருணை மனுக்கள் மீதான விசாரணை இன்னும் முடிவடையவில்லை. மேலும் இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரும் ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது. இதனால் மூவர் தூக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைக்க கோரப்பட்டது.
இதைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை ஜூன் 22-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications