டயாலிசஸ் செய்ய உள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்படும்-அமைச்சர் விஜய்
சென்னை: தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் டயாலிசஸ் செய்வதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கப்படும் என்று சட்டசபையில் விவாதத்தின் போது சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் நடைபெற்ற விவாதத்தின் போது பாமகவை சேர்ந்த கலையரசன், அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செய்யப்படும் டயாலிசஸ் சிகிச்சை குறித்து கேள்வி எழுப்பினார்.
அப்போது அவர் கூறியதாவது
அரசு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மக்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாக இருக்கிறது. ஆனால் டயாலிசஸ் செய்ய வேண்டிய நோயாளிகளுக்கு, 8 முறை மட்டுமே டயாலிசஸ் செய்ய முடியும் என்று கூறுகின்றனர். சிகிச்சை அளிக்கும் டாக்டர்களோ 12 முறை டயாலிசஸ் செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.
இதனால் உரிய நேரத்தில் டயாலிசஸ் செய்ய முடியாமல், நோயாளிகளின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. எனவே டாக்டர்கள் அறிவுரைப்படி அரசு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 12 முறை டயாலிசஸ் சிகிச்சை அளிக்க அமைச்சர் உத்தரவிட வேண்டும் என்றார்.
அதற்கு மறுப்புத் தெரிவித்த அமைச்சர் விஜய், டயாலிசஸ் சிகிச்சையை 12 முறை செய்ய முடியாது. அப்படி செய்தால் நோயாளியின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்றார்.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சவுந்தர்ராஜன் கூறியதாவது,
அமைச்சர் ஒரு டாக்டர். எனவே மருத்துவத்தில் அவர் அளவிற்கு எனக்கு விவரம் தெரியாது. ஆனாலும் ஒரு தகவலை கூற விரும்புகிறேன். என் நண்பர் ஒருவர் 202 முறை டயாலிசஸ் செய்துள்ளார். எனவே அதிக முறை டயாலிசஸ் செய்து கொண்டால், உயிரிழப்பு ஏற்படும் என்பது சரியல்ல.
எத்தனை முறை வேண்டுமானாலும் டயாலிசஸ் செய்து கொள்ளலாம். அரசு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 8 முறை மட்டுமே ஒருவர், டயாலிசஸ் செய்து கொள்ள முடியும் என்ற கட்டுப்பாட்டை நீக்கி, எத்தனை முறை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று அரசு உத்தரவிட வேண்டும் என்றார்.
அதனை ஏற்றுக் கொண்ட அமைச்சர் விஜய், டயாலிசஸ் செய்து கொள்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.