சுனாமி வந்திருந்தாலும் அணு உலைகளுக்கு பாதிப்பிருந்திருக்காது: இயக்குனர் காசிநாத் பாலாஜி
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இந்தோனேசியாவில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. தூத்துக்குடி துறைமுகத்திலும் நில அதிர்வு உணரப்பட்டது. ஆனால் கூடங்குளத்தில் எந்த நில அதிர்வும் ஏற்படவில்லை. நில நடுக்கம், சுனாமி பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்கும் ஹைதராபாத் இந்திய தேசிய மையத்தில் நாங்கள் அங்கம் வகிக்கிறோம்.
அதனால் நேற்று இந்தோனேசியா நிலநடுக்கம் குறித்து எங்களுக்கு உடனடியாக முன்னெச்சரிக்கை தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து விழிப்புணர்வுடன் இருந்தோம். சுனாமி வர வாய்ப்பு இல்லை என்று மாலை 6.30 மணி அளவில் ஹைதராபாத்தில் இருந்து தகவல் வந்தது. அணு மின் நிலையத்தில் நேற்று வழக்கம்போல் பணிகள் நடைபெற்றன.
அணு மின் நிலையத்தில் தினமும் மதியம் அதிகாரிகள், பணியாளர்கள் பங்கேற்கும் கூட்டம் நடக்கும். நேற்றைய கூட்டத்தில் சுனாமி எச்சரிக்கை தகவல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அணு மின் நிலையத்தை தகுந்த பாதுகாப்புடன் பராமரிக்க பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அலுவலர்கள் அறிவுறுத்தினர்.
நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படவில்லை. அப்படியே சுனாமி வந்திருந்தாலும் அணு உலைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டிருக்காது. கடல் மட்டத்தில் இருந்து 7.5 மீட்டர் உயரத்தில் இருக்கும் அணு மின் நிலையத்திற்கு சுனாமியால் ஆபத்து இல்லை. அணு மின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது என்றார்.