வாட் வரியை ரத்து செய்யக்கோரி புதுவையில் ஹோட்டல்கள், பேக்கரிகள் அடைப்பு
புதுச்சேரி: கூடுதல் வாட் வரியை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் உள்ள ஹோட்டல்கள், பேக்கரிகள், ரெஸ்டாரண்ட்டுகள், ஸ்வீட் ஸ்டால்கள் இன்று அடைக்கப்பட்டுள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரியில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக், டயர், மோட்டார் வாகனங்கள் மற்றும் சமைத்த உணவு ஆகியவற்றுக்கான வாட் வரியை அம்மாநில அரசு உயர்த்தியது. அதன்படி சமைத்த உணவுகளுக்கான வரி 2 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்ந்தது.
இந்த கூடுதல் வரி விதிப்புக்கு ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட், ஸ்வீட் ஸ்டால் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கூடுதல் வரியால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால் அதை ரத்து செய்யுமாறு அவர்கள் அரசை வலியுறுத்தி வந்தனர். ஆனால் அரசு அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.
இதையடுத்து நடந்த ஹோட்டல், பேக்கரி, ரெஸ்டாரண்ட், ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர்கள் கூட்டத்தில் கூடுதல் வரியை ரத்து செய்யக் கோரி ஏப்ரல் 17ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று அனைத்து ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட், பேக்கரி, ஸ்வீட் ஸ்டால் ஆகியவை அடைக்கப்பட்டுள்ளன.
மது பார்கள் இயங்கினாலும் அங்குள்ள ரெஸ்டாரண்ட்டுகள் அடைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 6 மணிக்கு துவங்கிய இந்த கடையடைப்பு போராட்டம் நாளை காலை 6 மணி வரை நடக்கிறது. இந்த போராட்டத்தால் வெளியூரில் இருந்து புதுச்சேரிக்கு செல்பவர்கள் உணவருந்த முடியாமல் தவிக்கின்றனர்.