நாடாளுமன்றம் 24 நாட்களுக்குப் பின் நாளை மீண்டும் கூடுகிறது
டெல்லி: 24 நாட்களுக்குப் பின் நாடாளுமன்றம் நாளை மீண்டும் கூடுகிறது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 12ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் மக்களவை, மாநிலங்களவையின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் உரையாற்றினார்.
14ம் தேதி நாடாளுமன்றத்தில் அப்போதைய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 15ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கையையும், 16ம் தேதி 2012-13ம் ஆண்டுக்கான பட்ஜெட்டையும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார்.
இதையடுத்து மம்தாவின் எதிர்ப்பால் தினேஷ் திரிவேதி ராஜினாமாவும் செய்து, புதிய ரயில்வே அமைச்சரும் பதவியேற்றார்.
.
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்ட அமர்வு கடந்த மாதம் 30ம் தேதி முடிவடைந்தது. இரண்டாவது அமர்வு நாளை (தொடங்குகிறது. இந்தக் கூட்டம் அடுத்த மாதம் 22ம் தேதி வரை நடக்கும்.
இந்தக் கூட்டத் தொடரின்போது பட்ஜெட் நிறைவேற்றப்படும். அத்துடன் நிலுவையில் உள்ள பல்வேறு மசோதாக்களும் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஊழலை ஒழிப்பதற்கான லோக்பால் மசோதா, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ஆகியவை நிறைவேற்றப்படும் என்று ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு வாக்குறுதி அளித்துள்ளது.
இக் கூட்டத் தொடரில் விலைவாசி உயர்வு, மாவோயிஸ்டுகள் வன்முறை, ராணுவத் தளபதி விவகாரம், ராணுவத்துக்கு டிரக்குகள் வாங்கியதில் நடந்த ஊழல், சத்தீஸ்கரில் கலெக்டர் கடத்தல், ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தள எம்.எல்.ஏ. கடத்தல் உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பவுள்ளன.