பேச்சில் உடன்பாடு: இன்று நடப்பதாக இருந்த பெட்ரோல் பங்க் ஸ்டிரைக் வாபஸ்
டெல்லி: பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இன்று நடத்துவதாக இருந்த வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்றால் ரூ.1.49ம், டீசலுக்கு 91 பைசாவும் டீலர்களுக்கு கமிஷனாக கிடைக்கிறது. இந்நிலையில் பெட்ரோல், டீசலுக்கான விற்பனை கமிஷனை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மத்திய பெட்ரோலியத்துறையிடம் தொடர்ந்து வலியுறுத்து வருகிறார்கள்.
இது குறித்து ஆய்வு செய்து பரிந்துரைக்க அபூர்வ சந்திரா கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி பெட்ரோல் பங்க்குகளில் வாகனங்களுக்கு காற்று நிரப்ப கட்டணம் வசூலிப்பது, அதன்படி 2 சக்கர வாகனங்களுக்கு ரூ.2ம், காருக்கு ரூ.5ம், பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ரூ.20ம் வசூல் செய்யவும், பெட்ரோலுக்கு லிட்டருக்கு 27 பைசாவும், டீசலுக்கு 14 பைசாவும் கூடுதல் டீலர் கமிஷன் வசூலிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பெட்ரோலியத்துறைக்கு பரிந்துரை செய்தது.
அந்த கமிட்டியின் கோரிக்கைகளை அமல்படுத்தக் கோரி நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இன்று நள்ளிரவு 12 மணி வரை நாடு முழுவதும் ஒரு நாள் வேலைநிறுத்தமாக பெட்ரோல் பங்க்குகளை மூடப்போவதாக அகிய இந்திய பெட்ரோலிய வர்த்தகர்கள் சம்மேளனம் அறிவித்தது. மேலும் இந்த மாத இறுதியில் இருந்து தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாகவும் அது அறிவித்திருந்தது.
இந்நிலையில் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இது குறித்து டெல்லியில் அகில இந்திய பெட்ரோலிய வர்த்தகர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஜய் பன்சால் கூறுகையில்,
மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டியுடன் கடந்த 19, 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது எங்களின் கோரிக்கைள், பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் டீலர் கமிஷனை உயர்த்தும் அபூர்வ சந்திரா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து பரிசீலிப்பதாக ஜெயப்பால் ரெட்டி தெரிவி்த்தார்.
இது தவிர பெட்ரோல் பங்க்குகளில் இலவசமாக அளிக்கப்படும் காற்று, கழிப்பறை வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்டவற்றுக்கும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற அந்த கமிட்டியின் பரிதுரையையும் பரிசீலிப்பதாக அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து 22ம் தேதி நள்ளிரவு முதல் 23ம் தேதி நள்ளிரவு வரை நடத்தபதாக இருந்த பெட்ரோல் பங்க் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளோம் என்றார்.