புதிய ராணுவ தளபதி பிக்ரம் சிங் பணி பதிவேட்டைத் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
காங்கோ நாட்டிலும் காஷ்மீர் மாநிலத்திலும் நடத்தப்பட்ட போலி என்கவுன்ட்டர்களில் பிக்ரம்சிங் தொடர்பிருப்பதால் அவரை புதிய ராணுவ தளபதியாக நியமிக்கக் கூடாது என்று ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் குழு பொதுநலன் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி, ஓய்வு பெற்ற கடற்படை தளபதி அட்மிரல் லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய குழு இம்மனுவைத் தாக்கல் செய்திருந்தது.
இம்மனுவை இன்று காலை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் லோதா மற்றும் கோகலே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பிற்பகல் 2 மணிக்குள் பிக்ரசிம்சிங்கின் பணிப்பதிவேட்டைத் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை ரகசியமாக நடத்த வேண்டும் என்ற மனுதாரர் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் மனுதாரர் கூறியுள்ள தகவல்கள் அனைத்தும் ஏற்கெனவே ஊடகங்களில் வெளியாகிவிட்டன என்றனர்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வாகன்வாதி மற்றும் நாரிமன் ஆகியோர் பொதுநலன் மனுவானது உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இதனை நிராகரிக்க வேண்டும் என்றனர்.