திருப்பூரில் 4 மாத குழந்தை உள்பட மேலும் 3 பேருக்கு பன்றிக்காய்ச்சல்
திருப்பூர்: திருப்பூரில் 4 மாத ஆண் குழந்தை உள்பட மேலும் 3 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள நிழலி கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி கந்தசாமி என்பவர் அண்மையில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானார். இவரைத் தொடர்ந்து திருப்பூரை அடுத்த நத்தம்காட்டுப்புதூரைச் சேர்ந்த பொம்முநாயக்கர் (65) என்பவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் திருப்பூரில் மேலும் 3 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூரை அடுத்த வேலம்பாளையம், ஜவஹர் நகரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி(55). கிரில் ஒர்க்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களாக இருமல் உள்ளிட்ட பாதிப்பு இருந்து வந்துள்ளது. பரிசோதனையில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரைத் தொடர்ந்து பழனிச்சாமியின் மருமகள் மேகலா (26), அவரது 4 மாத ஆண் குழந்தை சச்சின் பிரனவ் ஆகியோரும் பன்றி்க்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மேகலா மற்றும் குழந்தை சச்சின் ஆகிய இருவரும் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் இதுவரை 4 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தூங்கி வழிவதாக பொது மக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகின்றது.












Click it and Unblock the Notifications