4-வது நாளாக ஏர் இந்தியா விமானிகளின் வேலை நிறுத்தம் நீடிப்பு
ட்ரீம்லைனர் விமான பயிற்சி விவகாரத்தில் ஏர் இந்தியா நிர்வாகத்தின் மீது அதிருப்தி அடைந்த விமானிகள் உடல் நலக் குறைவைக் காரணம் காட்டி ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து விமானிகளை பணி இடைநீக்கும் செய்யும் நடவடிக்கையை ஏர் இந்தியா நிர்வாகம் மேற்கொண்டது.
இதனால் நியூயார்க், லண்டன், டொராண்டோ போன்ற நகரங்களுக்கு இயக்கப்பட வேண்டிய சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் மே 15-ந் தேதி வரை சர்வதேச சேவைக்கான புக்கிங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தம் தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கை விமானப் போக்குவரத்து அமைச்சர் அஜித்சிங் இன்று சந்தித்துப் பேசினார். இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அஜித்சிங், விமானிகளுக்கு உடல்நலக் குறைவு என்றுதான் தெரிவித்துள்ளனர். ஏர் இந்தியா நிறுவனத்துக்கும் தற்காலிக சிக்கல்தான் இது என்றார் அவர்.
கிங்பிஷரிலும் சிக்கல்
இதனிடையே நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் கிங்பிஷர் விமான சேவை நிறுவனத்திலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஊதிய பாக்கி கோரி விமானிகள் வேலை நிறுத்தம் செய்துவருகின்றனர். ஆனால் இதனை நிராகரித்துள்ள அதன் உரிமையாளர் விஜய்மல்லையா, ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்றார். இந்நிலையில் மாலையில் விமானிகள் தங்களது வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.