இலங்கையில் இனப்படுகொலையைத் தடுக்க இந்திய அரசு தவறி விட்டது- கத்காரி

மதுரையில் நேற்று தாமரைச் சங்கமம் என்ற பெயரில் பாஜக மாநில மாநாடு தொடங்கியது. மாநாட்டை, கட்சிக் கொடியேற்றி பாஜக தலைவர் நிதின் கத்காரி தொடங்கி வைத்தார்.
பின்னர் தலைமையுரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், இலங்கை குறித்தும் கு்றிப்பிட்டார். அவர் கூறுகையில்,
இலங்கை தமிழர்களுக்கு நடந்து வரும் அநியாயத்தை தடுத்து நிறுத்த காங்கிரஸ் அரசு தவறி விட்டது. இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலை குறித்து அறிந்து கொள்ள பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ் தலைமையில் ஒரு குழு இலங்கை சென்றது.
அப்போது இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர், என்னை டெலிபோனில் தொடர்பு கொண்டு இந்தியாவும், இலங்கையும் சகோதரத்துவ நாடுகள் என்று கூறினார். அப்போது நான், இலங்கை தமிழர்கள் மீதான அக்கிரமங்கள் நிறுத்தப்படும் வரை சகோதர உறவு இருக்க முடியாது என்று அறிவுறுத்தினேன் என்றார்.
காங்கிரஸ் அழியப் போகிறது
தொடர்ந்து அவர் பேசுகையில்,
பாரதீய ஜனதா கட்சி பிரதான அரசியல் கட்சியாக இருந்து வருகிறது. நாடாளுமன்ற லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும் பாரதீய ஜனதா கட்சி பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. 9 மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்கிறது.
எதிர்காலத்தில் சரித்திரம் படைக்கும் வலிமையை பாரதீய ஜனதா கட்சியினர் பெற்று இதை விட அதிக அளவில் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் செல்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இந்த நாட்டில் பிரச்சினை மிக அதிக அளவில் உள்ளது. விவசாயிகள் தற்கொலை செய்யும் அளவுக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். பொருளாதார வீழ்ச்சியை நாடு சந்தித்து வருகிறது. அன்னிய முதலீடு குறைந்து வருகிறது. இங்கிருந்து வெளிநாட்டில் மூலதனம் செய்யும் அளவுக்கு நிலைமை தலைகீழாக மாறி வருகிறது.
விமான போக்குவரத்து ஆணையம் திவாலாகி வருகிறது. வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இதற்கெல்லாம் காரணம் இந்த நாட்டை ஆட்சி செய்கிற ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தவறான பொருளாதார கொள்கை தான். இந்த ஆட்சியில் நீர்ப்பாசனம் தொடர்பான எந்த திட்டமும் வகுக்கப்படவில்லை. கடலில் வீணாக கலக்கும் கங்கை நீரை, காவிரிக்கு கொண்டு வர வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும் போது திட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வு, ஊழல், குடும்ப அரசியல் போன்றவற்றால் மக்கள் கவலையில் உள்ளனர். நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். காங்கிரஸ் கட்சிக்கு கெட்ட காலம் தொடங்கி விட்டது. மிக விரைவில் இருள் நீங்கும், தாமரை மலரும்.
பாஜக ஆளும் மாநிலங்களில் மதப் பாகுபாடு இல்லை
பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் 9 மாநிலங்களில் மத அடிப்படையில் எந்த பாகுபாடும் பார்ப்பது இல்லை. பாரதீய ஜனதா கட்சி சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி அல்ல. பயங்கரவாதிகளுக்கு எதிரான கட்சி. பாரதீய ஜனதா ஆட்சியின் போது தான் சிறுபான்மையின இனத்தை சேர்ந்த அப்துல்கலாம் குடியரசுத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
நான் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றதும் நடந்த தேசிய பொதுக்குழு கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் வாக்கு வங்கியை 10 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று கூறினேன்.
இந்தியாவில் தமிழகம் தான் பின்தங்கி இருக்கும் என்று நினைத்து இருந்தேன். இங்குள்ள கூட்டத்தை பார்க்கும போது எனக்கு நம்பிக்கை வந்துள்ளது. 2014 ம் ஆண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியை பிடிக்கும் என்றார் கத்காரி.












Click it and Unblock the Notifications