ஒரு வழியாக சட்டசபைக்கு வந்தார் விஜயகாந்த்... கையெழுத்துப் போட்டு விட்டு போய் விட்டார்!!
கடந்த மாதம் நடந்த சட்டசபைக் கூட்டத் தொடரின்போது தேமுதிக உறுப்பினர்களுக்கும், அதிமுக உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாதம் மூண்டது. அப்போது கோபத்துடன் படாரென்று எழுந்த விஜயகாந்த், அதிமுக உறுப்பினர்களைப் பார்த்து கண்களை உருட்டி, கைகளை நீட்டி, விரல்களை சுட்டி, நாக்கைக் கடித்து ஆவேசமாகப் பேசினார். இதையடுத்து அவரை 10 நாள் சஸ்பெண்ட் செய்தார் சபாநாயகர் ஜெயக்குமார்.
அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் விஜயகாந்த். அதை விசாரித்த உயர்நீதிமன்றம், விஜயகாந்த் மீது நடவடிக்கை எடுக்க சட்டசபை சபாநாயகருக்கு முழு உரிமை உண்டு என்று தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் சஸ்பெண்ட் காலம் முடிந்தது. ஆனாலும் விஜயகாந்த் சபைக்கு வரவில்லை. இதையடுத்து இதை வைத்தே தேமுதிகவினரை வாரி வந்தனர் அதிமுக உறுப்பினர்கள். இதுதொடர்பாக பலமுறை அதிமுக உறுப்பினர்களுக்கும், தேமுதிக உறுப்பினர்களுக்கும் இடையே காரசார வாதம் நடந்து வந்தது.
முதல்வர் ஜெயலலிதாவே ஒரு கட்டத்தில் நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்து விட்டு நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார் என்ற பாடலைக் குறிப்பிட்டு விஜயகாந்த்தைக் கிண்டலடித்தார்.
இந்த நிலையில் இன்று காலை திடீரென சட்டசபைக்கு வந்தார் விஜயகாந்த். வந்தவர் நேராக சட்டசபைக்குள் போவார், ஏதாவது பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் லாபியோடு நின்று விட்டார். அங்கிருந்து உறுப்பினர் வருகைப் பதிவேட்டில் கையெழுத்தை மட்டும் போட்டு விட்டு விர்ரென கிளம்பிப் போய் விட்டார்.
வழக்கமாக எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர்கள் அவர்களுக்கென அரசு கொடுக்கும் காரில்தான் வருவது வழக்கம். ஆனால் கார் தொடர்பாக சட்டசபை செயலகத்திற்கும், விஜயகாந்த்துக்கும் இடையே ஈகோ மோதல் நடந்து வருவதால் தனது சொந்தக் காரிலேயே விஜயகாந்த் வந்தார், சென்றார்.