ஓராண்டில் மாவோயிஸ்டுகளின் வன்முறை குறைந்துள்ளது: மமதா பெருமிதம்
கொல்கத்தா: தாம் பொறுப்பேற்ற ஓராண்டு ஆட்சிக் காலத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் மாவோயிஸ்டுகளின் வன்முறை குறைந்திருக்கிறது என்று அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் இடதுசாரிகள் வசம் இருந்த ஆட்சியை கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. கடந்த ஆண்டு மே மாதம் 20-ந் தேதி அம்மாநில முதல்வராக மமதா பானர்ஜி பொறுப்பேற்றார். இதையொட்டி தமது ஓராண்டு கால சாதனைகள் பற்றி மமதா கூறியுள்ளதாவது:
மேற்கு வங்கத்தில் இடதுசாரி முன்னணி ஆட்சியில் இருந்தபோது 2010-11-ம் ஆண்டில் மேற்கு மிட்னாப்பூர், புருலியா ஆகியவற்றை உள்ளடக்கிய ஜங்கிள்மகால் எனப்படும் பகுதியில் 139 பொதுமக்களும், 35 பாதுகாப்பு படையினரும் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டனர்.
கடந்த ஆண்டு முதல் எங்கள் ஆட்சிக்காலத்தில் ஜங்கிள்மகால் பகுதியில் மாவோயிஸ்டுகளின் வன்முறை பெருமளவு குறைந்துள்ளது. பொதுமக்களில் 12 பேர், பாதுகாப்பு படையினர் 2 பேர் காயம் மட்டுமே அடைந்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை எந்த பாதிப்புமே இல்லை.
மாவோயிஸ்டுகளின் முக்கிய தலைவர் கிஷென்ஜி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பின்னர் ஜகோரி பாஸ்கி, சுசித்ரா ஆகிய மாவோயிஸ்டு தலைவர்கள் சரண் அடைந்துள்ளனர்.
ரூ2க்கு 1 கிலோ அரிசி திட்டத்தை பழங்குடி மக்கள் பயன்பெறும் வகையில் அவர்கள் அனைவரையும் வறுமைக் கோட்டுக்குக் கீழே கொண்டுவந்தோம்.
சர்ச்சைக்குரிய சிங்கூரில் டாடா நிறுவனத்துக்காகக் கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலம் அனைத்தும் மீண்டும் விவசாயிகளிடமே ஒப்படைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications