52 நாட்கள் நடந்த தமிழக சட்டசபைக் கூட்டம்!
கடந்த மார்ச் 26ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கியது. நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதையடுத்து பட்ஜெட் மீதான விவாதமும், பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும் நடந்தது.
இந்நிலையில் 52 நாட்களாக நடைபெற்று வந்த இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று முடிவுற்றது.
இந்தக் கூட்டத் தொடரில் 4 திமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதையடுத்து கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் சட்டசபை நிகழ்ச்சிகளை திமுக புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
ஓராண்டு சாதனை வீடியோ சிடி:
இந் நிலையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா அதிமுக அரசின் ஓராண்டு சாதனைகளின் தொகுப்பு புத்தகங்களையும் சி.டிக்களையும் வெளியிட்டார். ஓராண்டு சாதனைகள் பற்றிய 3 தொகுப்புகள் வெளியிடப்பட்டன. மேலும் சிறப்பு ஸ்டிக்கர்கள், குறும்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றையும் ஜெயலலிதா வெளியிட்டார்.
ஜெயலலிதாவுக்கு தலைமைச் செயலாளர் தமிழ்த் தாயின் வெண்கல சிலையை வழங்கினார். ஜெயலலிதாவுக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்களும் அரசு உயர் அதிகாரிகளும் நேரில் வாழ்த்துத் தெரிவித்தனர்.
முன்னதாக சட்டப்பேரவைக்கு வந்த ஜெயலலிதாவுக்கு போயஸ் கார்டனிலிருந்து கோட்டை வரை வழியெங்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சட்டப்பேரவை கூடியதும் அதிமுக அரசின் ஓராண்டு நிறைவையொட்டி முதல்வர் ஜெயலலிதாவுக்கு உறுப்பினர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.