ஐ.பி.எல்.போட்டிகளுக்கு தடை விதிக்க வலியுறுத்தி கீர்த்தி ஆசாத் எம்.பி. உண்ணாவிரதம்
டெல்லி: தொடர்ச்சியான சர்ச்சைகளில் சிக்கி வரும் ஐ.பி.எல். போட்டிகளை தடுக்க வலியுறுத்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பாஜகவின் எம்.பியுமான கீர்த்தி ஆசாத் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை டெல்லியில் இன்று தொடங்கியுள்ளார்.
டெல்லி பெரோஷா மைதானத்திற்கு வெளியே உண்ணாவிரதம் இருந்து கீர்த்தி ஆசாத் கூறியதாவது:
ஐ.பி.எல். போட்டிகளை யார் கண்காணிப்பது...? அனைத்துமே வெளிப்படையானதாகத்தானே இருக்க வேண்டும்..விளையாட்டுப் போட்டிகளைப் பொறுத்தவரையில் அளவுக்கதிகமான அரசியல் தலையீடுகள் இருக்கின்றன..
கிரிக்கெட் என்பது இந்தியாவின் மதம். ஆனால் இந்த நாட்டுக்காக விளையாட விரும்பாமல் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட இளைஞர்கள் விரும்புகின்றபோது என்னை அது காயப்படுத்துகிறது என்றார் அவர்.
கீர்த்தி ஆசாத்துடன் மற்றொரு கிரிக்கெட் வீரரான விவேக் ரஸ்தானும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
ஸ்பாட் பிக்சிங், ஷாருக்கான் ரகளை, லூக் கைது என தொடர்ச்சியான சர்ச்சைகளால் ஐ.பி.எல்.போட்டிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வரும் நிலையில் கீர்த்தி ஆசாத் உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.