ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி 38% சரிவு
டெல்லி: இந்தியாவின் ஈரான் எண்ணெய் இறக்குமதியானது கடந்த மாதத்தில் 38 விழுக்காடு சரிவடைந்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்க பொருளாதாரத் தடையால்தான் இந்த சரிவு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அணு ஆயுதங்களை தயாரிப்பதால் ஈரான் மீது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பொருளாதாரத் தடை விதித்தன. மேலும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியது.
இதைத் தொடர்ந்து இந்தியா மே மாதத்தில் நாள் ஒன்றுக்கு 2.43 லட்சம் பீப்பாய் எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. இது, ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 10 விழுக்காடு குறைவாகும். 2011 மே மாதத்தில் ஈரானிலிருந்து நாள் ஒன்றுக்கு 3.94 லட்சம் பீப்பாய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. அதனுடன் ஒப்பிடும்போது எண்ணெய் இறக்குமதி 38 விழுக்காடு குறைந்துள்ளது.
ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா குறைத்துக் கொண்டிருப்பதால் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதியில் சில பொருள்கள் மீதான தடைகளை நீக்கவோ அல்லது கட்டுப்பாடுகளை தளர்த்தவோ வாய்ப்புள்ளது.