அமிர்தசரஸ் பேப்பர் மில்லில் பயங்கர தீ: தீயை அணைக்க வரும் ராணுவம்
அமிர்தசரஸ்: நாட்டில் உள்ள மிகப்பெரிய பேப்பர் மில்களில் ஒன்றான கன்னா பேப்பர் மில்லில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க இராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் சுமார் 100 ஏக்கர் நிலத்தில் உள்ளது கன்னா பேப்பர் மில்ஸ். இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பேப்பர் மில்களில் இதுவும் ஒன்று. இந்த மில் ராஜாசான்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. நேற்று மதியம் 2 மணிக்கு மில்லில் தேவையற்ற பேப்பர்கள் வைக்கும் குடோனில் திடீர் என்று தீப்பிடித்தது. அப்போது குடோனில் 60 முதல் 70,000 டன் தேவையற்ற பேப்பர் இருந்துள்ளது.
தீ மளமளவென பிற பகுதிகளுக்கும் பரவியது. தீ பரவுவதைப் பார்த்த மில் ஊழியர்கள் மற்றும் அங்குள்ளவர்கள் உடனே அங்கிருந்து வெளியேறினர். இது குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே 25 தீயணைப்பு வண்டிகள் விரைந்து தீயை அணைக்க போராடின. ஆனால் இன்னும் தீயை அணைக்க முடியவில்லை. இதையடுத்து தீயை அணைக்க ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது. சேத மதிப்பு பல கோடிகளைத் தொடும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து அம்ரித்சர் துணை கமிஷனர் ரஜத் அகர்வால் கூறுகையில்,
தீ கட்டுக்கடங்காமல் எரிகிறது. நேரம் ஆக ஆக தீயின் வேகம் அதிகரிக்கிறது. அதனால் தீயை அணைக்க ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநில அரசுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயை அணைக்க இன்னும் 48 மணிநேரம் ஆகும் என்றார்.