தூத்துக்குடியில் ரியல் எஸ்டேட் அதிபர் கொடூர கொலை
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரியல் எஸ்டேட் அதிபர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி லயன்ஸ் டவுன் 2வது தெருவைச் சேர்ந்தவர் நெக்டர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த அவர் முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமி என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார்.
மேலும் தூத்துக்குடி தெற்கு காட்டான் ரோடு காரக்கோட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே புது வீடு கட்டி வந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டு பணிகளை மேற்பார்வையிட சென்றார். நேற்று காலை புது வீட்டில் வேலைக்காக தொழிலாளர்கள் வந்தனர். அப்போது அங்கு நெக்டர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவர் அருகே மரக்கட்டையும், கல்லும் கிடந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி டி.எஸ்.பி. ராஜேந்திரன், ரூரல் டி.எஸ்.பி. நாராயணன், தென்பாகம் இன்ஸ்பெக்டர் குருநாதன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
நேற்று முன்தினம் இரவு 7 மணி வரை தொழிலாளர்கள் வீட்டு வேலையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் சென்ற பின்னர் நெக்டர் மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்களுக்கும், அவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் நெக்டரை கட்டையால் தாக்கியுளளனர். இதி்ல் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் தலையில் கருங்கல்லை போட்டு கொலை செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக நெக்டரிடம் வேலை பார்த்து வந்த சுடலை உள்ளிட்ட 5 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அதன் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். நெக்டர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications