மீண்டும் தமிழரே ஜனாதிபதியாக வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் ஆசை
நாகப்பட்டினம்: அப்துல் கலாமைப் போன்று மீண்டும் ஒரு தமிழரே குடியரசுத் தலைவராக வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நாகையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பாஜக அமைப்பு தேர்தல் நடக்கவிருக்கிறது. வரும் ஜூலை மாதம் 1ம் தேதி முதல் உறுப்பினர் சேர்க்கை துரிதப்படுத்தப்பட்டு டிசம்பர் மாத இறுதியில் மாநில தலைவர் தேர்தல் நடத்தப்படும்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துவிட்டது. நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.1,500 வழங்க வேண்டும். சாகுபடிக்காக காவிரி டெல்ட்டா மாவட்டங்களில் 12 மணி்நேரம் மின்சாரம் வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
ஆனால் காவிரியில் இருந்து 205 டி.எம்.சி. தண்ணீர் பெற்றேயாக வேண்டும். தமிழகத்திற்கு காவிரியில் இருந்து நீர் கிடைக்க மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும். மழை பெய்தால் தண்ணீர் திறந்து விடலாம் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. நாம் ஒன்றும் கர்நாடகத்திடம் பிச்சைக் கேட்கவில்லையே. நமது உரிமைக்காகவல்லவா போராடி வருகிறோம். தேவைப்பட்டால் இதற்காக பாஜக போராடும்.
தமிழகத்தில் சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது போன்று ஏழை இந்து மாணவர்களுக்கும் வழங்கக் கோரி ஜூலை கடைசி வாரம் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் போராட்டம் நடத்தப்படும். சென்னையில் எனது தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்.
பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து வரும் 22ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்துகிறோம். இதில் தமிழகத்தில் 1 லட்சம் பேர் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.
குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக அறிவிக்கும் நபரை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். இருப்பினும் வெங்கட்ராமன், அப்துல் கலாமை போன்று மீண்டும் ஒரு தமிழரே குடியரசுத் தலைவராக வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்றார்.












Click it and Unblock the Notifications