விண்வெளி ஆய்வு மையத்தில் வெற்றிகரமான இணைந்த சீன விண்கலம்
பெய்ஜிங்: பூமியில் இருந்து 343 கிமீ தொலைவில் பறந்து கொண்டிருக்கும் டியான்காங் 1 என்ற ஆய்வு கூடத்திற்கு சீனா அனுப்பிய விண்கலம் அதை சென்றடைந்தது. இந்த விண்கலத்தில் லியூ யாங் என்ற பெண் உள்பட 3 விஞ்ஞானிகள் சென்றனர். விண்வெளிக்கு சென்றுள்ள முதல் சீன பெண்மணி என்ற பெருமையை லியூ பெற்றுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைப் போன்று விண்வெளியில் ஆய்வு மையம் அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அந்த ஆய்வு மையத்தில் சில சோதனை மேற்கொள்ள லியூ யாங்(33) என்ற பெண் விஞ்ஞானி, ஜிங் ஹைபெங்(45) மற்றும் லியூ வாங்(43) ஆகிய 3 விஞ்ஞானிகள் அடங்கிய விண்கலமான ஷென்ஷூ 9 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அது பூமியில் இருந்து 343 கிமீ தொலைவில் பறந்து கொண்டிருக்கும் டியான்காங் 1 என்ற ஆய்வு மையத்தை இன்று சென்றடைந்தது.
இந்த விண்கலத்தில் சென்றுள்ள லியூ யாங் தான் விண்வெளியில் கால் வைத்துள்ள முதல் சீன பெண்மணி ஆவார். அவர்கள் 3 பேரும் விண்வெளியில் குறைந்தது 10 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு சோதனைகளை மேற்கொள்கின்றனர். டியாகாங் 1 கடந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. வரும் 2020க்குள் அதற்கு பதிலாக விண்வெளியில் நிரந்தர ஆய்வு மையம் அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.
அந்த ஆய்வு மையம் 60 டன் எடை கொண்டதாகவும், நாசாவின் ஆய்வு மையத்தை விட சிறியதாகவும் இருக்கும். சீனா கடந்த 2003ம் ஆண்டு தான் முதன் முதலாக மனிதனை விண்வெளி்க்கு அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.