தப்பியது கிரீஸ்!: ஐரோப்பிய யூனியன் நிர்பந்தத்தை ஏற்கும் கட்சி தேர்தலில் வென்றது!
இதன்மூலம் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக்கி வைக்கப்படும் அபாயத்திலிருந்து கிரீஸ் தப்பியுள்ளது.
கடந்த மே மாதம் தான் கிரீஸ் நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. ஆனால், அதில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் மீண்டும் இரு நாட்களுக்கு முன் தேர்தல் நடந்தது. இதில், ஐரோப்பிய யூனியனின் நிர்பந்தங்களை ஏற்கும் புதிய ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
ஐரோப்பிய யூனியனின் கட்டுப்பாடுகளை ஏற்க மறுக்கும் சிரிஸா கட்சி தோல்வியடைந்துள்ளது. இதன்மூலம் ஐரோப்பிய யூனியனில் இருந்து கிரீஸ் நாடு விலக்கி வைக்கப்படும் அபாயமும், கிரீஸை ஐரோப்பிய கரன்சி நாடுகளில் இருந்து நீக்கும் அபாயமும் விலகியுள்ளது.
அப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால் ஐரோப்பிய பொருளாதாரம் மட்டுமின்றி சர்வதேச பொருளாதாரமும் மேலும் சீர்குலையும் அபாயம் ஏற்பட்டிருக்கும்.
கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள கிரீஸ் நாட்டில் கடும் பணவீக்கம் நிலவுகிறது. கடும் பொருளாதார தேக்கம் காரணமாக 22 சதவீத மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன.
இதனால் அந்த நாடும் பயன்படுத்தும் ஐரோப்பிய கரன்சியான யூரோவின் மதிப்பும் சரிந்துள்ளது. இந்த கரன்சி மதிப்பு சரிவால் பிற ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கிரீஸை யூரோ கரன்சி நாடுகளில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்ற கோஷம் அதிகரித்துள்ளது. இல்லாவிட்டால் நமது நிலைமையும் கிரீஸ் மாதிரி ஆகிவிடும் என ஐரோப்பிய நாடுகள் கூறுகின்றன.
இதையடுத்து கிரீஸ் நாட்டுக்கு உதவ ஐரோப்பிய நாடுகள் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளன. அதன்படி தனது செலவுகளை கிரீஸ் குறைக்க வேண்டும், மக்களுக்கு வழங்கும் மானியம், உதவித் தொகைகள், அரசு ஊழியர்களுக்கு வழங்கும் அதிகமான ஊதியத்தை குறைக்க வேண்டும் என ஐரோப்பிய நாடுகள் நிபந்தனை விதித்துள்ளன.
ஆனால், இதை ஏற்றால் மக்களது ஓட்டுக்களை இழக்க நேரிடும் என்பதால் கிரீஸ் நாட்டுக் கட்சிகள் அதை எதிர்த்து வந்தன. இதனால் கிரீசுக்கு கடன் தர ஐரோப்பிய நாடுகள் மறுத்து வந்தன.
இந் நிலையில் தான் அந் நாட்டில் நடந்துள்ள தேர்தலில் ஐரோப்பிய நாடுகளின் நிபந்தனைகளை ஏற்கும் புதிய ஜனநாயகக் கட்சிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். இதன்மூலம் பெரும் பொருளாதார சீர்திருத்தங்களை அந்நாட்டு மக்கள் ஆதரித்துள்ளனர்.