12 ஆண்டுகள் கழி்த்து மிஸ் ஏசியா பசிபிக் அழகிப் பட்டம் வென்ற இந்திய அழகி
தென் கொரியாவின் பூசான் நகரில் மிஸ் ஏசியா-பசிபிக் அழகிப் போட்டி நடந்தது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் ஐ ஆம் ஷீ அழகிப் போட்டியில் வென்ற ஹிமாங்கினி சிங் யாடு கலந்து கொண்டார். இதில் ஹிமாங்கினி மிஸ் ஏசியா பசிபிக் அழகியாக முடிசூட்டப்பட்டார். 12 ஆண்டுகள் கழித்து இந்த பட்டத்தை இந்திய அழகி ஒருவர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பிரபஞ்ச அழகியான சுஷ்மிதா சென் ஐ ஆம் ஷீ என்ற அமைப்பை கடந்த 2010ம் ஆண்டு தொடங்கி அழகிப் போட்டி நடத்தி வருகிறார். இதில் வெற்றி பெறுபவர்கள் மிஸ் யூனிவர்ஸ் மற்றும் மிஸ் ஏசியா பசிபிக் அழகிப் போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ஹிமாங்கினியும் அப்படித் தான் சென்றுள்ளார்.
பட்டம் வென்ற ஹிமாங்கினி கூறுகையில்,
எனது கனவு நனவாகிவிட்டது. கடின உழைப்புக்கு பலன் கிடைத்துவிட்டது. இந்த நேரத்தில் நான் ஐ ஆம் ஷீ குழு மற்றும் சுஷ்மிதா சென்னுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர்கள் இன்றி இது சாத்தியம் இல்லை. அவர்களையும், இந்தியாவையும் பெருமையடையச் செய்தது த்ரில்லாக உள்ளது என்றார்.
ஐ ஆம் ஷீ ஆரம்பித்த பிறகு ஒருவர் சர்வதேச அளவில் அழகிப் பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும். இதனால் அமைப்பின் நிறுவனர் சுஷ்மிதா சென் குஷியாக உள்ளார்.
இது குறித்து சுஷ்மிதா கூறுகையில், நாங்கள் சாதித்துவிட்டோம். ஹிமாங்கினி பட்டம் வென்றதில் எங்கள் குழுவே சந்தோஷமாக உள்ளது என்றார்.
இந்தூரில் உள்ள இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் புரபஷனல் ஸ்டடீஸில் பிசிஏ பட்டம் பெற்றவர் ஹிமாங்கினி. கடந்த 2006ம் ஆண்டு மிஸ் இந்தூர் பட்டம் வென்ற அவர் பல்வேறு ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொண்டுள்ளார்.
முன்னதாக 2000ம் ஆண்டு தியா மிர்சா தான் மிஸ் ஏசியா பசிபிக் அழகிப் பட்டத்தை கடைசியாக வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.