குடியரசுத் தலைவர் தேர்தல்: பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க சிவசேனா முடிவு!
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளரான பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க சிவசேனா முடிவெடுத்துள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக ஒருமித்த கருத்தை உருவாக்க நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா தன்னிச்சையாக பிரணாப்பை ஆதரிக்க முடிவு செய்திருக்கிறது.
குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு சிவசேனா தலைவர் பால் தாக்கரே மற்றும் அவரது மகன் உத்தவ் தாக்கரேயை 2 முறை தொலைபேசியில் அழைத்து பிரணாப் முகர்ஜி ஆதரவு கோரினார். இதைத் தொடர்ந்தே ஆதரவு முடிவுக்கு சிவசேனா வந்திருக்கிறது.
இதனால்தான் குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் சிவசேனா கட்சி கலந்து கொள்ளவில்லை. இதனிடையே செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்த சிவசேனாவின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய், பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க சிவசேனா முடிவு செய்திருப்பதை உறுதி செய்திருக்கிறார்.
கடந்த குடியரசுத் தலைவர் தேர்தலிலும் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முடிவுக்கு மாறாக மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர் பிரதிபா பாட்டீல் என்பதற்காக தமது ஆதரவை சிவசேனா வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.