15 கிமீ சேஸ் செய்து 1 டன் வெடிபொருட்கள் இருந்த காரை மடக்கிய போலீஸ்
குமரி: குமரி எல்லையில் போலீஸ் ஏட்டை இடித்து தளளிவிட்டு 1 டன் எடையுள்ள வெடிபொருட்களுடன் தப்ப முயன்ற காரை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். 15 கி்மீ தூரம் அலைக்கழித்த கார் டிரைவரும் சிக்கினார்.
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு நூதன முறையில் அரிசி தினமும் கடத்தப்படுகிறது. இதனை தடுக்க வருவாய் அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 5 மணி அளவில் விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் சுகிபிரமிளா தலைமையில் வருவாய் ஆணையாளர் ஜோதிகுமார் மற்றும் அதிகாரிகள் திருவனந்தபுரம், நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சுவாமியார் மடம் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது கேரளாவை நோக்கி வந்த ஒரு குவாலிஸ் காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாகச் சென்றது. 15 கிமீ தூரம் அதிகாரிகள் ஜீப்பில் விரட்டிச் சென்றனர்.
கேரள எல்லையான செரியகொல்லா என்ற இடத்தில் சோதனைச்சாவடி தடுப்பு வேலியை அந்த கார் இடித்தது. மேலும் அங்கு நின்ற தக்கலை மதுவிலக்கு பிரிவைச் சேர்ந்த ஏட்டு டேவிட்ராஜ் என்பவரை இடித்து தளளிவிட்டு கார் தப்ப முயன்றது. ஆனால் அதிகாரிகள் விடாமல் விரட்டிச் சென்று சிறுது தூரத்தில் காரை மடக்கினர். உடனே காரை நிறுத்திவிட்டு டிரைவர் சஜி தப்பி ஓட முயன்றார். அவரை மடக்கிப் பிடித்து அருமனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து காரையும், டிரைவர் சஜியையும் காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
இந்த கார் படந்தாலுமுட்டைச் சேர்ந்தவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. காரில் கல்குவாரிக்கு பயன்படுத்தும் ஒரு டன் அமோனியம் சல்பேட் வெடி பொருள் இருந்தது. இதை நெல்லையிலிருந்து கேரள மாநிலம் நெடுமங்காட்டில் உள்ள ஒரு கல் குவாரிக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கார் மோதியதில் படுகாயம் அடைந்த ஏட்டு டேவிட்ராஜ் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.