தமிழக அமைச்சரவையை 25 பேராகக் குறைக்க திட்டம்?: ஜெயக்குமாருக்கு அமைச்சர் பதவி?
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சசிகலா பல்வேறு காரணங்களால் போயஸ் கார்டனை விட்டு வெளியேறி, மீண்டும் உள்ளே வந்துவிட்டார். சசிகலா போயஸ் கார்டனை விட்டு வெளியேற்றப்பட்ட பிறகு அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் விசுவாசிகளாக இருந்த அரசு உயர் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகளை ஜெயலலிதா மாற்றினார். ஆனால் அவருக்கு ஆதரவாக இருந்த அமைச்சர்கள் யாரும் மாற்றப்படவில்லை.
அதற்குள் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வந்ததால் அமைச்சரவை மாற்றியமைக்கும் முடிவு தள்ளி வைக்கப்பட்டது. அது முடிந்த பிறகு புதுக்கோட்டை இடைத்தேர்தல் வந்ததால் அமைச்சரவை மாற்றம் மீண்டும் தள்ளிப்போனது. தற்போது புதுக்கோட்டை இடைத்தேர்தல் முடிந்துள்ளதால் விரைவில் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் சில அமைச்சர்கள் பதவி பறிபோய்விடுமோ என்ற பயத்தில் உள்ளனர்.
தற்போது அமைச்சரவையில் உள்ள பலர் மீது கட்சி நிர்வாகிகளை மதிக்கவில்லை, கட்சியில் கோஷ்டி பூசலை வளர்ப்பது, அரசு நலத்திட்டங்களில் கவனம் கொள்ளாமல் இருப்பது, புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் வாக்கு வங்கியை இழந்தது, துறையில் அமைச்சர் செயல்பாடுகள் என பல்வேறு காரணங்களால் அமைச்சர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து முதல்வர் ஜெயலலிதா கொட நாடு சென்றுள்ளார். அங்கு இருந்து தான் அவர் பல முக்கிய முடிவுகளை எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி தற்போது அவர் அமைச்சரவை மாற்றம் குறித்து அங்கிருந்தே முடிவு எடுப்பார் என்று கூறப்படுகிறது. புதிய அமைச்சரவையில் முதல்வர் உள்பட 25 பேர் மட்டுமே இருப்பார்கள் என்றும் பேச்சு அடிபடுகிறது.
மேலும், தற்போது சட்டசபை சபாநாயகராக உள்ள ஜெயக்குமாருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படும் என்றும், நிதி அமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் சட்ட சபை சபாநாயகராக மாற்றப்படலாம் என்றும் தகவல் பரவி வருகின்றது.