குமரி-கண்ணணூர் ரயிலை மீண்டும் இயக்க ரயில்வே அமைச்சர் முகுல் ராய்க்கு கோரிக்கை
கன்னியாகுமரி: திருவனந்தபுரத்துடன் நிறுத்தபட்ட கன்னியாகுமரி-கண்ணணூர் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் முகுல் ராய்க்கு குமரி மாவட்ட ரயில் பணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்க தலைவர் எஸ்.ஆர்.ஸ்ரீராம் மத்திய ரயில்வே அமைச்சர் முகுல் ராய்க்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கட்டுமான தொழிலுக்காகவும், மீன்பிடி தொழிலுக்காகவும் தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் கேரளாவிற்கு சென்று வருகின்றனர். மங்களுரில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரி, மணிபால் பல்கலைக்கழகம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் கேரளாவிலிருந்து குமரி மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு நேரடியாக சென்று வர குறிப்பாக வடகேரளா பகுதிகளுக்கு தினசரி இரவு நேர ரயில் வசதி தற்போது இல்லை.
குமரி மாவட்டம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டத்தின் தென்பகுதிகளான நேமம், நெய்யாற்றங்கரை, பாறசாலை பகுதியிலிருந்து கேரளாவின் மலபார் பகுதிகளான சொர்ணூர்,கோழிக்கோடு, மாகி, தலச்சேரி, கண்ணணுர், காசரகோடு மற்றும் மங்களூருக்கு நேரடியாக செல்ல தினசரி இரவு நேர ரயில் வசதி இல்லை.
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கோட்டையம் மார்க்கமாக மதியம் 12.20 மணிக்கு செல்லும் நாகர்கோவில்- கோட்டையம் பயணிகள் ரயிலை விட்டால் அடுத்து மறுநாள் காலையில் 6 மணிக்கு தான் கோட்டையம் மார்க்கத்தில் செல்ல கன்னியாகுமரி-மும்பை ரயில் உள்ளது. சுமார் 17 மணி நேரத்திற்கு கோட்டையம் வழியாக பயணிக்க தினசரி ரயில் சேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வயனாடு, மங்களூர், கூர்க் போன்ற பகுதிகளுக்கு செல்ல நேரடி இரவுநேர ரயில் வசதி இல்லாமல் மிகவும் அவதிப்படுகின்றனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலை தரிசித்துவிட்டு மேற்கு கடற்கரை மார்க்கம் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவில், உடுப்பி, கும்பசேரி, தர்மஸ்தலா, கோகர்னா போன்ற புனித இடங்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு நேரடி ரயில் வசதி இல்லை. திருவனந்தபுரத்திலிருந்து மங்களூர் செல்ல மூன்று தினசரி இரவு நேர ரயில்களும் சுமார் பத்திற்கும் மேற்பட்ட வாராந்திர ரயில்களும் இயக்கபட்டு வருகிறது.
திருவனந்தபுரத்திலிருந்து மாலை நேரத்தில் மங்களூர் புறப்படும் மூன்று தினசரி ரயில்களில் ஏதாவது ஒரு ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பது கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். ஆனால் பல ஆண்டுகள் ஆகியும் இந்த கோரிக்கை நிறைவேற்றபடாமலேயே உள்ளது.
திருவனந்தபுரத்திலிருந்து இயக்கப்படும் ரயில்களில் 16347/16348 என்ற எண் கொண்ட ரயில் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு கன்னியாகுமரி-கண்ணணூர் ரயிலாக இயக்கபட்டு வந்தது. இந்த ரயிலை திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் திருவனந்தபுரத்துடன் நிறுத்திவிட்டனர். இதற்க மாற்று ஏற்பாடாக இதுவரை எந்த ரயில் வசதியும் செய்யபடவில்லை. அந்த கால கட்டத்தில் குமரி மாவட்ட ரயில் பயணிகளுக்கு ரயிலை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் குமரி மாவட்டத்துக்கு எதிராக செயல்பட்டனர்.
இந்த ரயில் 2005ம் ஆண்டு ரயில் நிதிநிலை அறிக்கையில் மங்களூர் வரை நீட்டிப்பு செய்து 16347/16348 எண் கொண்ட ரயிலாக திருவனந்தபுரம்-மங்களூர் மார்க்கத்தில் தற்போது இயக்கபட்டு வருகிறது.
எனவே, தற்போது திருவனந்தபுரம்-மங்களூர் மார்க்கத்தில் இயங்கும் 16347/16348 என்ற எண் கொண்ட ரயிலை குமரி மாவட்ட ரயில் பயணிகளுக்காக கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.