ஜனாதிபதி தேர்தல்: பிரணாப், சங்மா இன்று வேட்புமனு தாக்கல்

குடியரசுத் தலைவர் தேர்தல் முன்பு எப்பொழுதும் இல்லாத அளவுக்கு இம்முறை முக்கியத்துவம் பெற்றுள்ளது. குடியரசுத் தலைவர் வேட்பாளரைத் தேர்வு செய்ய அரசியல் கட்சிகள் போட்டா போட்டி போட்டதும், ஒவ்வொவருவரும் ஒவ்வொருவரை வேட்பாளராக தெரிவித்ததும், இறுதியாக வேட்பாளரைத் தேர்வு செய்ததும் தான் காரணம்.
இத்தனை பிரச்சனைகளுக்குப் பிறகு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக பிரணாப் முகர்ஜி அறிவிக்கப்பட்டார். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரவில் பி.ஏ.சங்மா போட்டியிடுகிறார். இந்நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் பிரணாபுக்கு ஆதரவு திரட்டி வருகின்றன. ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளமும், சிவ சேனாவும் பிரணாபுக்கு ஆதரவாக உள்ளன.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பிரணாபும், சங்மாவும் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள். பிரணாப் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர்கள் முன்னிலையில் இன்று காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சங்மா குஜராத் முதல்வர் நரேந்திர மோடி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
சங்மாவுக்கு பாஜக, அதிமுக, பிஜு ஜனதாதளம், ஜனதா கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. தற்போதைய நிலவரப்படி பிரணாபுக்கு தான் அதிக ஆதரவு உள்ளது. ஏதாவது அதிசயம் நடந்தால் தான் சங்மா வெற்றி பெற முடியும்.












Click it and Unblock the Notifications