டிரைவர் செல்போனில் பேசியதால்தான் விபத்து.. வாய் பேச முடியாதவர் நடித்து விளக்கம்!
சென்னை: சென்னையில் நேற்று அண்ணா மேம்பாலத்தில்நடந்த விபத்துக்கு செல்போனில் பேசியபடி பஸ்ஸை டிரைவர் ஓட்டிச் சென்றதே காரணம் என்று விபத்தில் சிக்கி காயமின்றி தப்பிய வாய் பேச முடியாத ஒரு வாலிபர் சைகை மூலம் நடித்துக் காட்டி விளக்கியுள்ளார்.
அவரது பெயர் பாலசுப்ரமணியம், வாய் பேச முடியாதவர். கால்கள் ஊனமுற்றவர். இவர் விபத்தில் சிக்கிய பஸ்சில் பயணித்துள்ளார். விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து போலீஸாரிடம் அவர் சைகை மூலம் நடித்துக் காட்டி விளக்கினார்.
பாலசுப்ரமணியம் பாரிமுனையில் பஸ் ஏறியுள்ளார். அண்ணா மேம்பாலத்தின் மீது பிற்பகல் 2 மணியளவில் பஸ் வந்தது. அப்போது மேம்பாலத்தின் இடதுபுறமாக பஸ்சைத் திருப்பியுள்ளார் டிரைவர். அந்த சமயத்தில் அவரது வலது கையில் செல்போன் இருந்துள்ளது. இடது கையால் ஸ்டியரிங்கைப் பிடித்துள்ளார்.
அப்போது திடீரென பஸ் நிலைதடுமாறி சுற்றுச் சுவரை உடைத்துக் கொண்டு கவிழ்ந்துள்ளது. அதிர்ஷ்டசமாக பாலசுப்ரமணியம் பஸ்சின் வலது புறம் இருந்ததால் காயமின்றி தப்பியுள்ளார்.
இவரது வாக்குமூலம் விசாரணைக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.