சிவசேனா, ஐக்கிய ஜனதா தளத்தால்தான் பிரணாப்புக்கு வெற்றி கிடைக்கும்: பால்தாக்கரே

சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் இது தொடர்பாக பால்தாக்கரே எழுதியுள்ளதாவது:
பிரணாப் முகர்ஜியோ அல்லது சங்மாவோ தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியாது. சிவசேனா, மற்றும் ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகளின் ஆதரவும் அவர்களுக்கு அவசியமானது.
பிரணாப் வேட்புமனு தாக்கல் செய்தபோது சோனியா காந்தி, மன்மோகன் சிங், முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத், ராம்விலாஸ் பஸ்வான், டி.ஆர். பாலு என ஏகப்பட்ட தலைவர்கள் உடன் இருந்தனர். இத்தனை பேர் உடன் இருந்ததால் மட்டும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுவிட முடியாது. சிவசேனா மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் முழு ஆதரவுதான் பிரணாப் முகர்ஜியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கும்.
பிரணாப் அனுபவம் மிக்கவர். நல்ல நிர்வாக திறன் உள்ளவர். அதனால் அவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் நாட்டில் முன்னேற்றம் ஏற்படுமே தவிர எந்த நட்டமும் ஏற்படாது. நமது நாட்டின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு அவரை ஆதரிக்க முடிவு செய்தது சிவசேனா.
பிரணாப் "ஏவுகணை மனிதர்" அல்லதான். ஆனால் அதைவிட வலுவான அணுகுண்டு அளவுக்கு சக்தி வாய்ந்தவர். நம்மிடம் அணு குண்டு இருந்த காலத்தில்தான் அப்சல்குரு போன்றவர்கள் நாடாளுமன்றத்தைத் தாக்கினார்கள். பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராகும்போது அப்சல் குரு போன்றோருக்கான தூக்குக் கயிறு கழுத்தை நெறிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
மன்மோகன் சிங்கின் ஆட்சியில் பிரணாப் முக்கிய பங்காற்றினார். பிரணாப்புக்கு மட்டுமே எங்களது ஆதரவு. ஆளும் கட்சிக்கு அல்ல என்பதை தெளிவுப்படுத்துகிறேன் என்று அதில் கூறியுள்ளார் பால்தாக்கரே.












Click it and Unblock the Notifications