பெட்ரோல் விலையை முழுமையாக குறைக்க வேண்டும்: தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை முழுமையாகக் குறைக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது என்றும், உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்துள்ளது என்றும் காரணம் காட்டி தி.மு.க அங்கம் வகிக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த 24-ந் தேதி அன்று லிட்டருக்கு 7 ரூபாய் 50 காசு அளவுக்கு பெட்ரோல் விலையை உயர்த்தியது. இதுகுறித்து எனது கண்டனத்தை நான் அன்றைய தினமே தெரிவித்திருந்தேன். அ.தி.மு.க. சார்பாகவும் இது தொடர்பாக 29.5.2012 அன்று போராட்டம் நடத்தப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சிகளும் மற்றும் பல்வேறு தரப்பினரும் பெட்ரோல் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு இரண்டு ரூபாய் 13 காசு என மிகக்குறைந்த அளவில் 3.6.2012 அன்று பெட்ரோல் விலையை குறைத்து ஒரு கண்துடைப்பு நாடகத்தை நடத்தியது.

உலகச்சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மிக அதிக அளவு தற்போது குறைந்துள்ள நிலையில் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு 29.6.2012 அன்று 3 ரூபாய் 13 காசு அளவுக்கு பெட்ரோல் விலையை குறைத்திருப்பது எவராலும் ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. கச்சா எண்ணெய் விலை உயரும் போதெல்லாம் சற்றும் தாமதிக்காமல் பெட்ரோல் விலையை உயர்த்தி வரும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு கச்சா எண்ணெய் விலை குறையும் போது பெட்ரோல் விலையை குறைப்பதற்கு அதே அளவு ஆர்வம் காட்டுவதில்லை. உலகச்சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மிக அதிக அளவு குறைந்துள்ள நிலையில், பெட்ரோல் விலை குறைக்கப்படவில்லை என பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ள நிலையில் மீண்டும் ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாகவே மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு பெட்ரோல் விலையை மிகக்குறைந்த அளவான 3 ரூபாய் 13 காசு என்ற அளவுக்கு குறைத்துள்ளது. இது எவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.

சர்வதேச சந்தையில் தற்போது கச்சா எண்ணெய்யின் விலையை ஒப்பிட்டு பார்க்கும் போது, 24.5.2012 அன்று உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை முழுவதும் திரும்பப்பெறுவதோடு மட்டுமல்லாமல் அதையும் விட அதிகமாகவே பெட்ரோல் விலை குறைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசோ 24.5.2012 அன்று உயர்த்தப்படுவதற்கு முன்பு இருந்த பெட்ரோல் விலையின் அளவுக்கு கூட விலையை குறைக்காதது மிகவும் வருந்தத்தக்கது.

எனவே, சர்வதேச சந்தையில் தற்போதுள்ள கச்சா எண்ணெய்யின் விலையை கருத்தில் கொண்டு, குறைந்தபட்சம் 24.5.2012 அன்று பெட்ரோல் விலை உயர்த்தப்படுவதற்கு முன்பு இருந்த விலையின் அளவுக்கு பெட்ரோல் விலையை குறைக்க தி.மு.க அங்கம் வகிக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+