பிளஸ் 1 மாணவிக்கு சீட் தர மறுப்பு- 'தட்டி' மூலம் தட்டிக் கேட்ட தந்தை!
நெல்லை: பிளஸ் 1 மாணவி கேட்ட பாடப்பிரிவை ஒதுக்க நன்கொடை கேட்டு சீட் தர மறுத்த பள்ளியை கண்டித்து மாணவியின் தந்தை தட்டி போர்டு வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் சிவகுருநாதபுரத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவர் அதே ஊரில் டீக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு 4 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இதில் அமுதா என்ற மகள் சுரண்டையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார்.
இந்த ஆண்டு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அவர் பிளஸ் 1 செல்வதற்காக சயின்ஸ் குரூப் பாடப்பிரிவை கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு அந்த பாடப்பிரிவை கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் அன்பழகன் தன் மகளை அழைத்து கொண்டு பள்ளிக்கு சென்றார்.
அங்கு தலைமை ஆசிரியர் சுந்தர் ராஜனை சந்தித்து இது குறித்து கேட்டார். என் மகளை விட குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு கம்யூட்டர் சயின்ஸ் சேர்த்து உள்ளீர்கள். இவளை மட்டும் சேர்க்க மறுப்பது ஏன் என்று வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால் தலைமையாசிரியர் அமுதாவுக்கு சீட் தர மறுக்கவே மனமுடைந்த அவர் தனது மகளை சிவகுருநாதபுரத்தில் உள்ள வேறு பள்ளியில் சேர்த்தார்.
இதுகுறித்து அன்பழகன் கூறியதாவது,
எனது மகளை சேர்க்க ரூ.5 ஆயிரம் நன்கொடை கேட்டனர். பணம் தர முடியாவிட்டால் மகளை பீடி சுற்றி பிழைக்க சொல் என்று அவதூறாக பேசினர். இதனால் மகளை வேறு பள்ளியில் சேர்த்தேன் என்றார்.
இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து அன்பழகன் சார்பில் சுரண்டை பஸ் நிலையம் மற்றும் முக்கிய இடங்களில் தட்டி போர்டு வைக்கப்பட்டுள்ளது. இது பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.