சி.ஆர்.பி.எப். வீரர்கள் சுட்டுக் கொன்றது மாவோயிஸ்டுகளையா? பழங்குடி மக்களையா?
டெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு சி.ஆர்.பி.எப். வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட 17 பேரில் பெரும்பாலானோர் அப்பாவி பழங்குடி இனமக்கள் என்று புகார் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பிஜப்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி வருகிறார்.
சத்தீஸ்கர் மாவட்டம் பிஜப்பூர் மாவட்டம் வனப்பகுதியில் உள்ள சகேர்குடா கிராமத்தில் மாவோயிஸ்டுகளை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதாகவும் இதில் 17 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. 200க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப். வீரர்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால் சுட்டுக் கொல்லப்பட்டோரில் பெரும்பாலானோர் அப்பாவி பழங்குடி மக்கள் என்று புகார் எழுந்தது. மாவோயிஸ்டுகளும் தங்களது தரப்பினர் யாரும் சுட்டுக் கொல்லப்படவில்லை என்றும் தங்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தால் நிச்சயம் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சிலராவது உயிரிழந்திருக்க நேரிடும் என்றும் கூறியிருந்தனர். சகேர்குடா கிராம மக்களும் கிராமத்து மரத்தடி திண்ணையில் இரவு நேரத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த அப்பாவிகளை சுட்டுக் கொன்றதாகக் கூறப்பட்டது. சுட்டுக் கொல்லபப்ட்டோரில் சிலர் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த மாணவர்கள் என்பதும் மற்றொரு புகார்.
இதைத் தொடர்ந்து மாவட்ட மாஜிஸ்திரேட் தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணை இன்று தொடங்கியிருக்கிறது.
இதனிடையே 17 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தண்டகாரன்யா வனப்பகுதிக்குட்பட்ட கிராமங்கள், நகரங்களில் ஜூலை 5-ந் தேதி பந்த் நடத்தவும் மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்திருக்கின்றனர். தண்டகாரன்யா என்பது ஒடிஷா, ஆந்திரா, சத்தீஸ்கர் மாநில எல்லைகளில் விரிந்து கிடக்கும் வனப்பகுதியாகும்.