"பால் விலையை உயர்த்தினார்களே, குறைத்தார்களா?.. பஸ் கட்டணத்தை உயர்த்தினார்களே, குறைத்தார்களா?"
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் பாணி அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 3ம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலை யில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.2.13 குறைத்தது. தற்போது எதிர்க்கட்சிகள் யாரும் வலியுறுத்தாத நிலையில் மத்திய அரசு, உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்ததால் மேலும் ரூ.3.13 விலையை குறைத்துள்ளது.
முதலில் ரூ.2.13 குறைத்ததை கண்துடைப்பு நாடகம் என்றும், தற்போது குறைத்திருப்பதை எவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்றும் வர்ணித்து முதல்வர் ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசு மே மாதம் பெட்ரோல் விலையை உயர்த்திய பிறகு, இரண்டு முறை குறைத்துள்ளது. ஆனால் தமிழக அரசு விற்பனை வரியில் ஒரு பைசாவாவது இதுவரை குறைத்து அறிவித்ததா?. பால் விலையை உயர்த்தினார்களே, குறைத்தார்களா?. பேருந்துக் கட்டணத்தை உயர்த்தினார்களே, குறைத்தார்களா?. மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் கிராமங்களில் மக்கள் கடந்த இரண்டு மாத காலமாக படாதபாடு படுகிறார்களே, அதைப் பற்றி ஏதாவது கவலைப்படுகிறார்களா?
அரசு ஊழியர்களுக்கு வீட்டுக் கடன்
அரசு அலுவலர்கள் இதுவரை ரூ.15 லட்சம் அளவிற்கு கடன்பட்டவனாக இருந்ததை, ஜெயலலிதா ரூ.25 லட்சம் கடன்காரனாக மாற்ற முன் வந்துள்ளார். மருத்துவக் காப்பீட்டு நிதி உதவி ரூ. 2 லட்சமாக இருந்த போது ஒவ்வொரு அரசு அலுவலரும் மாதந்தோறும் ரூ.25 செலுத்தினர். ஆனால் தற்போது இந்தத் தொகையை ரூ.75 ஆக உயர்த்தியுள்ளனர். ஒவ்வொரு அரசு அலுவலரும் இனி மாதந்தோறும் தங்கள் ஊதியத்தில் அரசுக்கு ரூ.75 செலுத்த வேண்டும்.
இந்தச் செய்தியை அப்படியே மறைத்து விட்டு ரூ.2 லட்சம் நிதிஉதவி ரூ.4 லட்சமாக உயர்த்தப்படுகிறது என்று மட்டும் அரசு செய்திக் குறிப்பில் தெரிவித்திருக்கிறார்கள் என்றால், மக்களையும், அரசு ஊழியர்களையும் இந்த அரசு எந்த அளவுக்கு ஏமாற்றுகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.