லஷ்கர்- ஏ-தொய்பா தீவிரவாதிகளுக்கு கிளைடர் விமான பயிற்சி தரும் சீனா!
செளதி அரேபியாவால் கைது செய்யப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட தீவிரவாதி அபு ஜிண்டால் தெரிவித்துள்ளான்.
எல்லை தாண்டி இந்தியாவுக்குள் கிளைடர் விமானங்கள் மூலம் ஊடுருவவும், இந்தியாவுக்குள் வான் வழியாக தாக்குதல் நடத்தவும் இந்தப் பயிற்சிகளை லஷ்கர்-ஏ-தொய்பா கடந்த 2 ஆண்டுகளாக அளித்து வருவதாகவும், இந்தப் பயிற்சிகளை சீனாவைச் சேர்ந்த ஒரு கிளைடர் நிபுணர் அளித்து வருவதாகவும் டெல்லி போலீசாரிடம் அபு ஜிண்டால் வாக்குமூலம் அளித்துள்ளான்.
மேலும் இந்தப் பயிற்சிகளை பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் ஒருங்கிணைத்து வருவதாகவும் ஜிண்டால் கூறியுள்ளான். இந்த நபர் ஐஎஸ்ஐ உளவுப் பிரிவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று இந்தியா கருதுகிறது.
கடந்த 2010ம் ஆண்டு ஆரம்பத்தில் இந்தப் பயிற்சிகள் தொடங்கியதாகவும் இதற்காக சீனாவிடம் இருந்து 50 கிளைடர்களை லஷ்கர் அமைப்பு வாங்கியதாகவும், சுமார் 100 தீவிரவாதிகளுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் ஜிண்டால் திடுக்கிடும் தகவலைத் தெரிவித்துள்ளான்.
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையான பால்டிஸ்தான் பகுதியில் இந்தப் பயிற்சி நடந்து வருவதாகவும் ஜிண்டால் கூறியுள்ளான்.
மேலும் லஷ்கர் அமைப்பு தனது தலைமையகத்தை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் தொலாய் பகுதிக்கு மாற்றிவிட்ட தகவலையும் ஜிண்டால் தெரிவித்துள்ளான்.
மேலும் நாசிக்கில் உள்ள இந்திய போலீஸ் அகாடமி பயிற்சி மையத்தைத் தாக்கவும் லஷ்கர் திட்டமிட்டு வருவதாகவும் கூறியுள்ளான்.
இந் நிலையில் மும்பை தாக்குதல் நடந்தபோது பாகிஸ்தானின் கராச்சி கண்ட்ரோல் ரூமில் இருந்தபடி தீவிரவாதிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்ததையும் ஜிண்டால் ஒப்புக் கொண்டுள்ளான். அவனது வாய்ஸ் சாம்பிள்களை அமெரிக்காவின் எப்பிஐ அமைப்புக்கு இந்திய உளவுப் பிரிவிகள் அனுப்பி வைத்துள்ளன. மும்பை தாக்குதல் நடந்தபோது தொலைபேசியில் பேசிய ஜிண்டாலின் குரல் மாதிரியுடன் இவை ஒப்பிட்டுப் பார்க்கப்படவுள்ளன.
பேசியது ஜிண்டால் தான் என்பதை அமெரிக்கா உறுதி செய்தால் அதை பாகிஸ்தான் மறுக்க முடியாது என்பதால் இந்த நடவடிக்கையை இந்தியா எடுத்துள்ளது.