ஸ்பெக்ட்ரம்: மன்மோகன் சிங்- ராசா சந்தித்ததற்கு ஆவணங்கள் இல்லை: கைவிரிக்கும் பிரதமர் அலுவலகம்
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் தொலைத் தொடர்புத் துறை முன்னால் அமைச்சர் ஆ. ராசா ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு குறித்த விவரங்கள் தங்களிடம் இல்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு ஊழலில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட பலரும் சிறைவாசம் அனுபவித்து ஜாமீனில் உள்ளனர். நாட்டையே உலுக்கிய இந்த விவகாரம் தொடர்பாக 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2008-ம் ஆண்டு ஜூலை வரை பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் அமைச்சராக இருந்த ஆ. ராசா இடையே எத்தனை முறை சந்திப்பு நடந்தது என்பது பற்றிய விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தீபக் சலுஜா என்பவர் கோரியிருந்தார். பிரதமர் அலுவலகத்திடம் கொடுக்கப்பட்ட இந்த மனு தொலைத் தொடர்புத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அந்த அமைச்சகமோ பிரதமர் அலுவலகத்துக்கே திருப்பி அனுப்பியது.
பிரதமர் அலுவலகமும் இதை ஏற்று சிறப்பு பாதுகாப்புப் படைக்கு அனுப்பி வைத்தது. ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனித உரிமை மீறல்கள், ஊழல் விவகாரங்கள் தொடர்பாக மட்டுமே தங்களால் விவரங்களைத் தர முடியும் என்றும் இதுபோன்ற சந்திப்பு விவரங்களைத் தர விலக்கு இருப்பதாகவும் சிறப்பு பாதுகாப்புப் படை கூறிவிட்டது. இதையே பதிலாகவும் முதலில் பிரதமர் அலுவலகம் அனுப்பிவிட்டது.
ஆனால் மத்திய தகவல் ஆணையத்தை நாடி தமக்கான உரிய பதிலை பெற்றுத்தர தீபக் சலூஜா முறையிட்டார். இந்த மனுவை தகவல் ஆணைய விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த விசாரணையின் போது ஆஜரான பிரதமர் அலுவலக அதிகாரி சஞ்சுக்தா ராய், ஆ. ராசா மற்றும் பிரதமர் மன்மோகன்சிங் இடையேயான சந்திப்பு குறித்த விவரங்கள் தங்களிடம் இல்லை என்றும் சிறப்புப் படையினரிடம் இது தொடர்பான விவரம் இருக்கலாம் என்றும் கூறிவிட்டார்.
இதனால் சிறப்புப் பாதுகாப்புப் படையினர் தகவல் தொடர்பு அலுவலருக்கு இப்போது மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.