கைதானது 70,000 பேர்தானாம்.. சொல்கிறது போலீஸ்
சென்னை: தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று நடந்த சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு 70,000 பேர் கைதானதாக காவல்துறை கணக்கு கூறுகிறது.
தமிழகம் முழுவதும் இன்று திமுகவினர் சிறை நிரப்பும் போராட்டத்தில் குதித்தனர். படு உற்சாகமாக, கையில் இரண்டு செட் டிரஸ், கருப்பு சிவப்பு துண்டு சகிதம் படு குஷியாக அவர்கள் காலையிலேயே போராட்டக் களத்தில் குவியத் தொடங்கினர்.
திமுகவினர் போராட்டத்தில் குதிக்கத் தயங்குவதாக செய்திகள் வெளியான நிலையில் பெரும் திரளாக, அலை அலையாக திமுகவினர் போராட்டத்தில் பங்கேற்றது அனைவரையும் வியப்படைய வைத்தது.
அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் முன்னாள் அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், கட்சிப் பிரமுகர்கள் என பல ஆயிரம் பேர் திரண்டனர். இப்போராட்டத்தில் கலந்து கொண்டு கைதானது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் என்று திமுக தரப்பு கூறியது.
ஆனால் 70,000 பேர் வரை மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பு தகவல் தெரிவித்தது.
வீடியோ எடுத்து முகவரி சேகரித்தனர்
இதற்கிடையே, கைது செய்யப்பட்டு ஆங்காங்கே திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள திமுகவினரைத் தனித் தனியாக வீடியோ எடுத்து முகவரி, பெயர், குடும்ப உறுப்பினர்கள் விவரம், குடும்ப பொருளாதார சூழ்நிலை உள்ளிட்டவற்றை போலீஸார் சேகரித்ததாக தகவல்கள் கூறின.
4 பிரிவுகளில் வழக்குப் பதிவு
மேலும், சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதான திமுகவினர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
பொது இடத்தில் சட்டவிரோதமாக கூடுதல், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்த முயலுதல், பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் கடைசியில் அத்தனை பேரையும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் விடுவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications